Last Updated:
பிகார் வாக்காளர் பட்டியல் தொடர்பாக குறைகளை தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம் உள்ளது. இதுவரை 28370 புகார்களும் பெறப்பட்டுள்ளன.
“தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, அனைவரும் சமம். யார் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு கடமையிலிருந்து பின்வாங்காது.” என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, போலி வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பதாகப் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக பெங்களூருவில் ஒற்றை படுக்கை அறை வசதி கொண்ட வீட்டின் முகவரியில் 80 வாக்காளர்கள் இருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து இந்த விவகாரம் தேசிய அளவில் தற்போது பெரும் கவனம் பெற்றுள்ளது. இதேபோல், பிகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் அங்கு மேற்கொண்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
பிகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் 65 லட்சம் நபர்கள் போலி வாக்காளர்கள் என அவர்களைப் பட்டியலில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையம். இந்த நடவடிக்கைக்குப் பிறகு தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதிலும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இதற்கிடையில், பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் பேசுகையில், “எங்களிடம் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என பாகுபாடு இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும், வாக்களிக்கவும் வேண்டும். சட்டத்தின்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலம் பிறக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பிறகு எப்படி தேர்தல் ஆணையம் ஒரே அரசியல் கட்சிகளிடையே பாகுபாடு காட்ட முடியும்? தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, அனைவரும் சமம். யார் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு கடமையிலிருந்து பின்வாங்காது.
பிகார் வாக்காளர் பட்டியல் தொடர்பாக குறைகளை தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம் உள்ளது. இதுவரை 28370 புகார்களும் பெறப்பட்டுள்ளன. குறைகளை தெரிவிக்க அனைத்துக் கட்சிகளுக்கும் அவகாசம் வழங்கப்பட்டது. சிலர் மக்களிடம் அவதூறு பரப்புகின்றனர். மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அது எங்களை பாதிக்காது. எங்களின் நேர்மையை யாரும் கேள்வி எழுப்பமுடியாது.
தேர்தல் ஆணையத்தின் கதவுகள் அனைவருக்கும் எப்போதும் சமமாகத் திறந்திருக்கும். தரை மட்டத்தில், அனைத்து வாக்காளர்களும், அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் இணைந்து வெளிப்படையான முறையில் செயல்பட்டு, சரிபார்த்தல், கையொப்பமிடுதல் மற்றும் வீடியோ சான்றுகளை வழங்குதல் ஆகியவற்றைச் செய்கிறார்கள். அடிப்படை யதார்த்தத்தைப் புறக்கணித்து குழப்பத்தை பரப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். ஒளிவுமறைவற்ற நிலையில் வாக்கு திருட்டுக்கு வாய்ப்பே இல்லை. எந்தக் கட்சியின் அழுத்தத்தாலும் அரசியலமைப்பின் கடமையில் இருந்து தவறமாட்டோம். தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது. வாக்கு திருட்டு குற்றச்சாட்டு அரசமைப்புக்கு எதிரானது” என்று தெரிவித்துள்ளார்.
Delhi,Delhi,Delhi
August 17, 2025 3:33 PM IST
“எங்களிடம் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என பாகுபாடு இல்லை” – ராகுல் காந்திக்கு புகாருக்கு தேர்தல் ஆணையர் விளக்கம்!

