Last Updated:
US-Israel War on Iran | ஓமனில் எண்ணெய் கப்பல் மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா படகை மோதவைத்து ஈரான் வெடிக்கச் செய்த தாக்குதலில், கப்பலில் இருந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்.
கமேனி கொலைக்குப் பழித்தீர்க்க மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் நேச நாடுகள் மீது ஈரான் 3ஆவது நாளாகத் தாக்குதலைத் தொடர்ந்தது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகளும் அடுத்தடுத்து குண்டுகளை வீசியதால் பதற்றமான சூழல் தொடர்கிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளன. இதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் நேச நாடுகளான பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் 3ஆவது நாளாகப் பதில் தாக்குதல் நடத்தியதால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் தொடர்ந்தது.
சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான அராம்கோ மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தியது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து, ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் உயரமான கட்டடம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. இஸ்ரேலில் டெல் அவிவ், ஜெருசலேம், பீர் ஷேவா பகுதிகளில் ஏவுகணைகளை வீசி ஈரான் பதிலடி கொடுத்தது. இதனால், அங்கு சைரன் ஒலித்த வண்ணம் இருந்தது.
ஓமனில் எண்ணெய் கப்பல் மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா படகை மோதவைத்து ஈரான் வெடிக்கச் செய்த தாக்குதலில், கப்பலில் இருந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், தங்களின் பலத்தை காண்பிக்கும் வகையில், டிரோன் ஆயுதக் கிடங்கின் காணொளியை ஈரான் வெளியிட்டுள்ளது. இந்த பதற்றத்திற்கு இடையே, குவைத் வான் பரப்பில் பாதுகாப்பிற்காகப் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் எஃப்.15 ரகத்தைச் சேர்ந்த 3 போர் விமானங்களை குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு தவறுதலாகச் சுட்டு வீழ்த்தியது. அவற்றில் இருந்த அமெரிக்க வீரர்கள் 6 பேர் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர்.
இதனிடையே, நேற்றும் ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் அடுத்தடுத்து ஏவுகணை மழை பொழிந்தன. இந்நிலையில், அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் ஈரானில் 550-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அணுசக்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரான் முயற்சிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லாக்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 31 பேர் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா தாக்குதல் நடத்தக் கூடாது என லெபனான் பிரதமர் தடை விதித்துள்ளார். மேற்காசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எகிறப் போகும் பெட்ரோல், டீசல், தங்கம் விலை… மத்திய கிழக்கில் தொடர் பதற்றம்… ஈரான் 3வது நாளாக தாக்குதல்!


