கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் (Lady Ridgeway Hospital for Children) சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியதைத் தொடர்ந்து சிறுநீர் வடிகட்டுதல் செயல்முறை முழுமையாக தோல்வியடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியால் சிறுவனின் மரணம் ஏற்பட்டதாகக் நீதிபதி தெரிவித்துள்ளார்.
விசாரணையின் தீர்ப்பை இன்று (11.03.2025) கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குணவல (Harshan Kekunawela) அறிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு
அதன்படி, குறித்த சிறுவனின் மரணம் வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் வெளிப்பட்டால், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேலதிக நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஹம்தி ஃபஸ்லிம் என்ற மூன்று வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பிறகு வைத்திய ஊழியர்களின் அலட்சியத்தால் தங்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி, சிறுவனின் பெற்றோர் பொரளை பொலிஸில் முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது.