ஊழலை ஒழிக்க இது தான் வழி: முதலமைச்சர் விஜய்க்கு Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு யோசனை..!!
சோஹோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்தது முதலே அரசின் செயல்பாடுகளை புகழ்ந்து வருகிறார். குறிப்பாக ஊழல் ஒழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஸ்ரீதர் வேம்பு ஆதரவு தெரிவித்து வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஊழல்களை ஒழிக்க சிங்கப்பூர் பாணியில் கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சருக்கு நான் வழங்கும் யோசனைகளில் ஒன்று, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஊழல் விவகாரங்களில் சிங்கப்பூர் போன்ற கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பது தான். சிங்கப்பூரில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் உயர்மட்ட ஊழல்களுக்கு மரண தண்டனை வழங்குவதோடு, அதை தீவிரமாகவும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் என கூறியுள்ளார்.

தனக்கு நினைவு தெரிந்த வரை சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மீது தீவிர ஈர்ப்பு கொண்டிருப்பதாகவும், அவரது ஒவ்வொரு உரையையும் தான் வாசித்துள்ளதாகவும் கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு, அவரது அணுகுமுறையை நாம் கட்டாயம் படிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்திய சூழலில் ஐஏஎஸ் , ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய பணி அதிகாரிகளின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும், கடந்த காலங்களில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முடிவில்லாமல் விவாதிப்பதை தவிர்க்க, பழைய குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும், மீண்டும் தவறு செய்தால் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சட்ட நடைமுறை என்பதன் பெயரில் நீதி விசாரணைகள் 30 ஆண்டுகள் தாமதமாக கூடாது என்றும், சிங்கப்பூர் நீதிமன்றங்களை போல நம் நாட்டின் நீதிமன்றங்களும் மிக திறமையாக செயல்பட அதை கற்று கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
One of the suggestions I have for our Honourable Chief Minister Joseph Vijay is to consider Singapore like laws on drug dealing and high level corruption.
Singapore awards the death penalty for drug dealing and for high level corruption. They do enforce these laws.
In the…
— Sridhar Vembu (@svembu) August 23, 2026 “>
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஊழல் ஒழிப்பு, போதை பொருள் ஒழிப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஸ்ரீதர் வேம்பு இந்த யோசனை கூறியுள்ளார். இருந்தாலும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்துவதன் மூலம் மட்டும் ஊழலை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது என சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சியை வழங்குவதே தனது இலக்கு என விஜய் பலமுறை குறிப்பிட்டுள்ளார். முந்தைய திமுக ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்கள் குறித்த ஆதாரங்கள் அடங்கிய கோப்புகள் தன்னிடம் இருப்பதாகவும், உரிய நேரத்தில் அவற்றை வெளியிடப் போவதாகவும் அவர் அண்மையில் தெரிவித்திருந்தார். அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்கள் எளிதாக புகார் தரும் வகையில் தொலைபேசி எண்களை அறிவித்தார்.

