உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் உள்ள பன்னாட்டு உணவு நிறுவனமான கே.எஃப்.சியில் தற்காலிகமாக சைவ உணவுகளை மட்டுமே விற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து மதத்தைச் சேர்ந்த துறவிகள் கன்வர் யாத்திரை செல்லும் பாதையில் அக்கடை அமைந்துள்ளதால், சைவ உணவுகள் மட்டுமே என்ற பலகை அக்கடையின் கதவில் தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இந்து மதத்தைச் சேர்ந்த ரக்ஷா தள அமைப்பைச் சேர்ந்தவர்கள், இறைச்சி உணவு விற்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அக்கடையின் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள முக்கிய சாலையில் கே.எஃப்.சி உணவு நிறுவனம் இயங்கி வருகிறது. மொறுமொறுப்புத் தன்மையுடன் கோழி இறைச்சியை விற்பனை செய்வதில் புகழ் பெற்ற இந்த நிறுவனத்தில் தற்போது சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என பலகை வைக்கப்பட்டுள்ளது.

