சுங்கச்சாவடி வழியாக வாகனங்கள் விரைந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியதை ஏற்க மறுத்த ஊழியர்கள், அப்பாவிகள் இருவரை ரவுண்டு கட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். தனது சகாக்கள் மீது கை வைத்ததை கண்டு பொங்கியெழுந்த பெண் வழக்கறிஞர், சொர்ணாக்கா அவதாரம் எடுத்து டோல்கேட்டை அடித்து உடைத்து ரணகளம் செய்துள்ளார். அத்துமீறலில் ஈடுபட்ட டோல்கேட் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், வன்முறையை கையில் எடுத்த அனைவர் மீதும் நடவடிக்கை பாயுமா?
உத்தரப் பிரதேசம் மாநிலம் பாரபங்கியில் உள்ள சுங்கச்சாவடி வழியாக 24 மணி நேரமும் வாகனங்கள் வந்துசெல்வது வழக்கம். மிகவும் பிஸியாக காணப்படும் இந்த டோல்கேட்டில் ஞாயிறன்று வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளன. அப்போது, அவ்வழியாக சோன்பத்ராவைச் சேர்ந்த ஆர்த்தி என்பவர் காரில் சென்றுள்ளார். வழக்கறிஞரான இவருடன் மேலும் மூன்று பேர் பயணம் செய்துள்ளனர். சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டது ஏன் என்று கேட்டு வரும்படி தனது சகாவிடம் ஆர்த்தி கூறியுள்ளார்.
உடனே, காரில் இருந்து இறங்கிய நவீன் குமார் என்பவர், சுங்கச்சாவடி ஊழியரிடம் சென்று ஏன் வாகன நெரிசலை சீர் செய்யவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு, முறையாக பதில் அளிக்காத ஊழியர், தகாத வார்த்தைகளால் நவீன் குமாரை திட்டியதாக கூறப்படுகிறது. அத்துடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் நவீன் குமார் திரும்பி வராததால், அவினேஷ் துபே என்பவரை பெண் வழக்கறிஞர் அனுப்பி வைத்துள்ளார். அவர் அங்கு சென்றபோது சுங்கச்சாவடி ஊழியர்கள் நான்கைந்து பேர் சேர்ந்து நவீன் குமாரை தாக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, அவர்களை தடுக்க முயற்சித்த அவினேஷையும் அவர்கள் சுற்றிவளைத்து தாக்கியுள்ளனர்.
தனது சகாக்கள் இருவருக்கும் என்ன ஆனது என்று, பெண் வழக்கறிஞர் ஆர்த்தியே காரை விட்டு இறங்கி பார்க்க சென்றுள்ளார். அப்போது, அவர்கள் இருவரையும் கும்பலாக சேர்ந்து டோல்கேட் ஊழியர்கள் தாக்கியதை கண்டு ஆர்த்தி ஆவேசம் அடைந்துள்ளார். சண்டையை விலக்கிவிட முயன்றவரை, பெண் என்றும் பாராமல் அந்த கும்பல் தள்ளிவிட்டு தாக்கியுள்ளது. அதனால் பொறுமை இழந்த பெண் வழக்கறிஞர், சொர்ணாக்காவாக மாறி டோல்கேட் ஊழியர்களை லெப்ட் ரைட் வாங்கியுள்ளார்.
அப்படியும் ஆத்திரம் தீராமல், டோல்கேட் பூத்தை காலால் எட்டி உதைத்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். நிலவரம் கலவரமான நிலையில், ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர். அவர்கள், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
மேலும், பெண் வழக்கறிஞருடன் வந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டதால், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டோல்கேட் ஊழியர்கள் இருவரை கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் பெண் வழக்கறிஞர் உட்பட 4 பேர் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

