உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் அரசுப் பேருந்தில் ஒப்பந்த அடிப்படையில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஜிதேந்திர குமார் என்பவருக்கும் இடையே கடந்த நவம்பர் மாதம்தான் திருமணம் நடைபெற்றது. ஜிதேந்திராவும் அரசு நிறுவனம் ஒன்றில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
காதல் ஜோடி திருமண வாழ்வில் அடி எடுத்து வைத்து 2 மாதங்கள் கூட ஆகவில்லை. அதுவரை காதல் மொழி பேசி வந்தவர்களுக்கு திருமணம் ஆனதும் தகராறு தொடங்கியுள்ளது. தினசரி நீயா? நானா? என சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென ஜன்னல் கம்பியில் மப்ளரால் ஜிதேந்திரா தூக்கு போட்ட நிலையில், சடலமாகக் கிடந்தது கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஜோதியின் குடும்பத்தினர் ஜிதேந்திரா தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தனர். ஆனால், அதில் சந்தேகம் ஏற்பட்டதால் ஜிதேந்திர குமார் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் ஜிதேந்திர குமார் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்கிற அதிர்ச்சித் தகவல் அம்பலமானது. உடனே, போலீசாரின் சந்தேகப் பார்வை மனைவி ஜோதி மீது விழுந்துள்ளது. ஜோதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
ஜோதியும், அவரது பெற்றோரும் சேர்ந்து ஜிதேந்திராவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்துகொண்டதுபோல் ஜோடித்தது விசாரணையில் அம்பலமானது. ஜோதியும், ஜிதேந்திராவும் நவம்பர் மாதம்தான் திருமணம் செய்து கொண்டனர். இருவரது குடும்பத்தினரும் சேர்ந்துதான் திருமணம் செய்துவைத்தனர். திருமணமாகி ஒரு சில வாரங்களில் அவர்களுக்குள் பணப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஜோதியின் வங்கிக் கணக்கிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து ஜிதேந்திர குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
காதலிக்கும்போது ஜிதேந்திராவின் இந்த குணம் பற்றி அறிந்திராத ஜோதி கடும் விரக்தி அடைந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று அவர்களுக்குள் பணம் காணாமல்போனது குறித்து திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜோதியை ஜிதேந்திரா அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வெகுண்டெழுந்த ஜோதி தனது பெற்றோர் மற்றும் சகோதரனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்து வரவழைத்தார். பெற்றோர் காளிசரன், சமேலி, சகோதரன் தீபக் ஆகியோர் ஜிதேந்திராவை ஒரு வழி செய்து விட வேண்டும் என்கிற ஆத்திரத்தோடு அங்கு வந்துள்ளனர். அவர்களும் ஜிதேந்திர குமாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய அவர்கள் ஜிதேந்திர குமாரை தீர்த்துக்கட்டும் முடிவுக்கு வந்துள்ளனர்.
ஜிதேந்திர குமாரின் கை, கால்களை ஜோதியின் பெற்றோர் மற்றும் சகோதரன் பிடித்துக்கொள்ள தாலி கட்டிய மனைவியான ஜோதி, தனது கணவர் என்றும் பாராமல் கழுத்தை நெரித்தே கொலை செய்திருக்கிறார். ஜிதேந்திரா இறந்ததை உறுதி செய்துகொண்ட பிறகு அதை தற்கொலையைப் போன்று மாற்ற மப்ளர் ஒன்றை ஜன்னல் கிரிலில் கட்டி அதில் ஜிதேந்திராவைக் கட்டி தொங்கவிட்டுள்ளனர். பின்னர் ஊர் முழுவதும் ஜிதேந்திரா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி கதை கட்டிவிட்டிருக்கின்றனர்.
போலீசார் வந்தபோது ஜிதேந்திரா உடலில் எந்தவித அறிகுறியும் இல்லாததால் முதலில் தற்கொலையாகவே கருதியிருக்கின்றனர். ஆனால், ஜிதேந்திர குமாரின் சகோதரர் அஜய் குமார் கொடுத்த புகாரின்பேரில் உடற்கூராய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து ஜோதி மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்தனர். சகோதரர் தீபக் குமார் தலைமறைவாகிவிட்டதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
9 ஆண்டு காதல், திருமணத்திற்கு பின்னர் இரண்டே மாதங்களில் கசந்துபோனதால் கணவரை கழுத்தை நெரித்து கொல்லும் அளவுக்கு மனைவி சென்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

