International
oi-Mani Singh S
பெர்ன்: சுவிட்சர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உள்ளாடைகளை மண்ணில் புதைக்க சொல்லி, அதன் ரிசல்ட் என்ன என்பதை ஆய்வு செய்து பார்த்து இருக்கிறார்கள். இந்த ஆய்வு குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஆய்வுக்கு பின்னால் இருக்கும் வலுவான காரணம் உண்மையில் இது தேவையான ஒன்றுதான் என நினைக்க வைத்துள்ளது. விஞ்ஞானிகளின் இந்த வினோத ஆய்வுக்கு என்ன காரணம்? என்ற விவரங்களை பார்க்கலாம்.
சுவிட்சர்லாந்தில் விஞ்ஞானிகள் ஒரு விசித்திர பரிசோதனையில் இறங்கியுள்ளனர். அதாவது, நாட்டில் உள்ள ஆயிரம் பேரை தன்னார்வலர்களாக தேர்வு செய்து, அவர்களிடம் நீங்கள் பயன்படுத்திய உள்ளாடைகள் உள்ளிட்ட காட்டன் துணிகளை மண்ணில் புதைத்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்களாம். உள்ளாடைகளை மண்ணில் புதைப்பதால், என்ன நடந்து விடப்போகிறது என பலருக்கும் கேள்வி எழலாம்.

வினோத ஆய்வு
விஞ்ஞானிகள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னணியிலும் வலுவான காரணம் இல்லாமல் இருக்காது என்று பலரும் சொல்வார்கள். இந்த விஷயத்திலும் அப்படித்தான்.. சும்மா பொழுதுப்போக்கிற்காக இப்படி ஒரு விசித்திர பரிசோதனையில் விஞ்ஞானிகள் ஈடுபடவில்லையாம். பருத்தி உள்ளாடைகளை மண்ணில் புதைத்து வைத்து அதன் மூலம் மண்ணின் தன்மையை அறிந்து கொள்ளவே இப்படியான் ஒரு வினோத ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபடு இருக்கிறார்கள்.
சிட்டிஷன்ஸ் அறிவியல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான ஆய்வில் சுமார் 1,000 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த திட்டத்திற்கு “ப்ரூஃப் பை அண்டர்பேன்ட்ஸ்” என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்ததாக தெரிகிறது. சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலைக்கழகம் மற்றும் அந்நாட்டின் வேளாண் ஆராய்ச்சிக்கான கூட்டாட்சி சிறப்பு மையமான அக்ரோஸ்கோப் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, இந்த வினோத திட்டத்தை 2021-ம் ஆண்டு தொடங்கினர்.
பயோலாஜிக்கல் செயல்பாடுகள்
பூமிக்கடியில் பயோலாஜிக்கல் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த ஆய்வு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சயின்ஸ் டெய்லி குறிப்பிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி திட்டத்தில் இணைந்த தன்னார்வலர்கள் 2 ஆயிரம் ஜோடி காட்டன் உள்ளாடைகள் மற்றும் 12 ஆயிரம் டீ பேக்குகள் ஆகியவற்றை நாடு முழுவதும் சுமார் ஆயிரம் இடங்களில் மண்ணில் புதைத்து வைத்துள்ளனர்.
இரண்டு மாதங்கள் கழித்து, அவற்றை தோண்டி எடுத்து இருக்கிறார்கள். அவற்றை புகைப்படம் எடுத்ததோடு மண்ணின் மாதிரிகளையும் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் ஜர்னல் பிளாண்ட்ஸ் உள்ளிட்ட ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது. அதில், புதைத்து வைத்த காட்டன் உள்ளாடைகள் ஒரே மாதிரியாக சிதவு அடையாமல் வேறுபாடுகள் இருந்துள்ளன. இதற்கு காரணம் மண்ணின் கீழ் நடந்த பயோலாஜிக்கல் செயல்பாடுகளே காரணம் என தெரியவந்துள்ளது. தனியார் தோட்டங்களில் புதைக்கப்பட்ட உள்ளாடைகள் வேகமாக சிதைவு அடைந்துள்ளன.
என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது
புல்வெளிகளில் சிதைவு வேகம் குறைவாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. தோட்டங்களில் உள்ள மண்ணில் அதிக அளவிலான கரிம பொருட்கள் இருந்துள்ளன. மண்புழுக்கள், பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுகளின் மூலம் நிலத்தை எவ்வாறு பராமரிக்கிறோம் என்பது மண்ணின் உயிரியல் செயல்பாடு மற்றும் மண்ணின் தரம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

