குவாஹாட்டி: உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தன்வி சர்மா, தாய்லாந்து வீராங்கனை அன்யாபாட் பிச்சிட்பிரீச்சாஸக் ஆகியோர் விளையாடினர். இதில் தன்வி சர்மா 7-15, 12-15 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீராங்கனை அன்யாபாட் பிச்சிட்பிரீச்சாஸக்கிடம் தோல்வி கண்டு 2-வது இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதன்மூலம் உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற 5-வது இந்தியர் என்ற பெருமையை தன்வி பெற்றார். இதற்கு முன்பு அபர்ணா பொப்பட் (1996), சாய்னா நெவால் (2006), சிரில் வர்மா (2015), சங்கர் முத்துசாமி (2022) ஆகியோர் உலக ஜூனியர் பாட்மிண்டனில் வெள்ளி வென்றிருந்தனர்.
உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை சாய்னா நெவால் பெற்றுள்ளார். இவர் 2008-ம் ஆண்டு இந்தப் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.