Last Updated:
மலேசியா பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் உலகை இந்தியாவுடன் இணைக்கும் பாலம் எனவும், திருவள்ளுவர் மையம் மலேசியாவில் அமைக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
உலகிற்கு இந்தியா அளித்த பரிசு ‘தமிழ்’ என்றும், உலகை இந்தியாவுடன் இணைப்பதும் தமிழ் எனவும், மலேசியாவில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக மலேசியா சென்றுள்ளார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆரத் தழுவி வரவேற்றார்.
பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்து, இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சியின் அரங்கிற்கு சென்றனர். அங்கு, 800 கலைஞர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். தொடர்ந்து மேடையில் பேசிய பிரதமர் மோடி, மலாய் மொழிக்கும் இந்திய மொழிக்கும் நிறைய தொடர்பு இருப்பதாகக் கூறி, உலகத்துடன் இந்தியாவை இணைப்பது தமிழ்தான் என்றார்.
தங்கள் திறமையால் தமிழர்கள் உலகம் முழுவதும் சேவையாற்றி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தமிழர்களை பட்டியலிட்டார். பழைய இந்தி பாடலை பிரதமர் அன்வர் இப்ராஹிம் பாடிய வீடியோ வைரலானதை குறிப்பிட்டு பேசிய மோடி, புகழ்பெற்ற எம்.ஜி.ஆரின் பாடல்களை அவர் விரும்பி கேட்பதும் அருமையான விஷயம் என்றார்.
மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு, மலேசியாவில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றமடைந்துள்ளதாகவும், 11ஆவது இடத்தில் இருந்த பொருளாதாரம் 3ஆவது இடத்திற்கு முன்னேறி இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

