Last Updated:
ரிலையன்ஸ் தனது பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) மற்றும் செல் உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 120 கிகாவாட் மணிநேரமாக மூன்று மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 49-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் (AGM) உரையாற்றிய புதிய ஆற்றல் (New Energy) பிரிவின் இயக்குனர் ஆனந்த் அம்பானி, இந்தியாவின் பசுமை ஆற்றல் துறையில் மிகப்பெரிய மைல்கல்லாக அமையவிருக்கும் ரிலையன்ஸின் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) மற்றும் செல் உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 120 கிகாவாட் மணிநேரமாக மூன்று மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஆனந்த் அம்பானி தெரிவித்துள்ளார். இதற்கென முதற்கட்டமாக அமைக்கப்பட்டு வரும் 40 GWh திறன் கொண்ட ஜிகா தொழிற்சாலை இந்த ஆண்டின் பிற்பாதியில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இதற்கான அனைத்து உபகரணங்களும் ஏற்கனவே திட்டப் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளன.
இந்த தொழிற்சாலை முழுமையாகச் செயல்படத் தொடங்கும்போது, மின்சார வாகனங்கள் (EV) மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சேமிப்பிற்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் லித்தியம் அயர்ன் பாஸ்பேட் (LFP) பேட்டரிகளைத் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் உருவெடுக்கும்.
பேட்டரி திட்டங்களுடன் இணைந்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சூரிய ஒளிமின் (Solar PV) செல் மற்றும் மாட்யூல் உற்பத்தி ஆலைகள் தற்போது வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன. நிறுவனம் ஏற்கனவே சுமார் 1 கிகாவாட் (GW) திறன் கொண்ட ஹெட்டிரோஜங்ஷன் தொழில்நுட்ப (HJT) சோலார் மாட்யூல்களை உற்பத்தி செய்துள்ளது.
இந்த அதிநவீன HJT மாட்யூல்கள், வழக்கமான சோலார் மாட்யூல்களுடன் ஒப்பிடும்போது 2% கூடுதல் ஆற்றல் உற்பத்தியையும், 15% சிறந்த வெப்பநிலை செயல்திறனையும் வழங்குவதோடு, 25% குறைவான சிதைவுத் திறனையும் (lower degradation) கொண்டவை ஆகும்.
இந்தியாவிலேயே இந்த மேம்பட்ட HJT சோலார் தொழில்நுட்பத்திற்கான சான்றிதழைப் பெற்ற முதல் நிறுவனம் ரிலையன்ஸ் ஆகும். பாலிசிலிகான், இங்காட்கள், வேஃபர்கள், செல்கள், மாட்யூல்கள் மற்றும் கண்ணாடி ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் உள்ளடக்கிய, ஆண்டுக்கு 20 GW ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் உற்பத்தித் திறனை எட்டுவதை நோக்கி ரிலையன்ஸ் வேகமாக நகர்ந்து வருகிறது.
இந்த பிரம்மாண்டமான முயற்சி இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ ஆகிய இலக்குகளுக்குப் பெரும் பக்கபலமாக அமைந்து, நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் என்று ஆனந்த் அம்பானி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.


