இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் வெளிநாடுகளில் சிறையில் இருக்கும் இந்தியர்களின் விவரங்கள் குறித்து எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப் பூர்வ பதிலை கொடுத்துள்ளார்.
அவரது பதிலில், உலகம் முழுக்க வெவ்வேறு நாடுகளில் மொத்தம் 10,574 இந்தியர்கள் சிறையில் இருப்பதாகவும், இதில் 43 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2,773 இந்தியர்கள் சிறையில் இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் 2,379, நேபாளத்தில் 1,357 இந்தியர்கள் கைதிகளாக சிறையில் உள்ளனர்.
இதற்கு அடுத்தடுத்த இடங்களில், கத்தாரில் 795, மலேசியாவில் 380, குவைத்தில் 342, யு.கே.வில் 323, பஹ்ரைனில் 261, பாகிஸ்தானில் 246, சீனாவில் 183 இந்தியர்கள் சிறையில் உள்ளனர்.
மேலும், அங்கோலா, பெல்ஜியம், கனடா, சிலி, எகிப்து, ஈராக், ஜமைக்கா, மொரிஷியஸ், செனகல், சீஷெல்ஸ், தென்னாப்பிரிக்கா, சூடான், தஜிகிஸ்தான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் தலா ஒரு கைதி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
உலகம் முழுக்க இந்த 10,574 இந்திய கைதிகளில் 43 பேருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதில், அதிகப்பட்சமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 21 பேரும், சவுதி அரேபியாவில் 7 பேரும், சீனாவில் 4 பேரும், இந்தோனேசியாவில் 3 பேரும், குவைத் நாட்டில் 2 பேரும் மரண தண்டனையை பெற்றுள்ளனர்.
அமெரிக்கா, மலேசியா, ஓமன், பாகிஸ்தான், கத்தார் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் தலா ஒரு இந்திய கைதி மரண தண்டனையை பெற்றுள்ளனர்.
சட்ட உதவி, தூதரக அணுகல் மற்றும் முன்கூட்டியே விடுதலை அல்லது நாடு திரும்புவதற்கான முயற்சிகள் இருதரப்பு பேச்சுவார்த்தைகள், நீதித்துறை தலையீடுகள் மற்றும் தேவைப்படும்போது, பொது மன்னிப்புக்கான முறையீடுகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
கூடுதலாக, தகுதியான வழக்குகளில் நிதி மற்றும் சட்ட உதவிகளை வழங்க, குறிப்பாக சட்ட பிரதிநிதித்துவம் மற்றும் நாடு திரும்பும் செலவுகளுக்கு உதவ, இந்திய சமூக நல நிதி (ICWF) பயன்படுத்தப்படுகிறது.
தற்போது இலங்கை காவலில் வைக்கப்பட்டுள்ள 28 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்காக இலங்கையுடன் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
July 25, 2025 8:22 PM IST

