Last Updated:
விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் கேப்டன் சூர்ய குமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார்.
உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை இந்திய அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று 3 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நெதர்லாந்து அணியை பாகிஸ்தானும், ஸ்காட்லாந்தை வெஸ்ட் இண்டீஸ் அணியும் வென்றது.
3 ஆவது போட்டியாக இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதும் மேட்ச் மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற அமெரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்ததை தொடர்ந்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
இந்திய அணியின் வீரர்கள் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்து இணைந்த இஷான் கிஷன் – திலக் வர்மா இணை ஓரளவு ரன்கள் சேர்த்தது.
இஷான் கிஷன் 20 ரன்னிலும், திலக் வர்மா 16 பந்துகளில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சிவம் துபே முதல் பந்திலேயே வெளியேற, இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் என்ற நிலையில் தடுமாறியது.
ரின்கு சிங் 6 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் கேப்டன் சூர்ய குமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார்.
இதனால் இந்திய அணி தடுமாற்றத்திலிருந்து மீண்டது. அக்சர் படேல் சூர்யகுமாருடன் ஓரளவு பார்ட்னர்ஷிப் அமைத்து 14 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக ரன்கள் சேர்த்த சூர்யகுமார் யாதவ், அரைச்சதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 161 ரன்கள் குவித்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 4 சிக்சர், 10 பவுண்டரியுடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார்.
இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்கா அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
Feb 07, 2026 10:45 PM IST


