கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் உள்ள முக்கிய பொதுச் சந்தைகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த வியாபாரிகள் மீது கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) சிறப்பு அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 11) நடைபெற்ற இந்த ‘சிறப்புச் சந்தை நடவடிக்கை’ (Special Market Operation)
தாமான் OUG செபுத்தே சந்தை (Taman OUG Seputeh Market), புடு சந்தை (Pudu Market) மற்றும் கோலாலம்பூர் வடக்கு மொத்த விற்பனைச் சந்தை (Pasar Utara Wholesale Market) ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் உரிமம் இன்றி வியாபாரம் செய்தல், வெளிநாட்டினர் வியாபாரம் செய்தல், அனுமதி இன்றி உதவியாளர்களை நியமித்தல் மற்றும் பொது இடங்களில் இடையூறு செய்தல் ஆகிய காரணங்களுக்காக 35 அபராதங்கள் விதிக்கப்பட்டன. மேலும், சந்தைப்பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு 27 போக்குவரத்து அபராதங்கள் வழங்கப்பட்டன.
மேலும் நடைபாதைகள், ஐந்து அடி பாதைகள் மற்றும் வாகன நிறுத்தங்களில் வைக்கப்பட்டிருந்த 16 வகையான வணிக உபகரணங்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடமிருந்து காய்கறிகள், பழங்கள், குடைகள் மற்றும் இதர பொதுவான வியாபாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆவணப்படுத்துதலுக்காக DBKL சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த அமலாக்க நடவடிக்கைகள் கூட்டரசுப் பிரதேச ‘வியாபாரிகள் உரிம துணைச் சட்டம்’, ‘சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டம்’ மற்றும் ‘போக்குவரத்து விதிகள்’ ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
இத்தகைய சட்டவிரோத வியாபாரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து பொதுமக்கள் ஏதேனும் புகார் அளிக்க விரும்பினால், adukl.dbkl.gov.my என்ற இணையதளம் வழியாகத் தகவல் தெரிவிக்கலாம் என DBKL கேட்டுக்கொண்டுள்ளது. இனம் கண்டறியப்பட்ட மற்ற இடங்களிலும் இதுபோன்ற சோதனைகள் தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.




