க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளில் கடந்த காலங்களைப் போன்ற தமிழ் மொழிமூல வினாத்தாள்களில் மொழிபெயர்ப்புப் பிழைகள் இனி ஏற்படாதவாறு உரிய கவனம் செலுத்தப்பட்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி மற்றும் உயர் கல்விப் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சத்தியலிங்கம் எம்.பி., உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பாட வினாத்தாளில் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்றப்படும் போது பெருமளவு மொழிபெயர்ப்புப் பிழைகள் ஏற்படுவதாகவும், இதனால் மாணவர்கள் கனிசமான புள்ளிகளை இழந்து எதிர்காலத்தை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். உதாரணமாக 2025ஆம் ஆண்டு உயிரியல் வினாத்தாளில் மாத்திரம் 27 கேள்விகளில் பிழைகள் காணப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இம்முறை உயர்தரப் பரீட்சையில் பாளி மொழியும் சித்திரப் பாடமும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டு பாடங்களுக்கும் தோற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, உயர்தரப் பரீட்சை உட்பட ஏனைய பரீட்சைகளிலும் வினாத்தாள்களின் மொழிபெயர்ப்பில் பிரச்சினைகள் இருப்பது வடக்கில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பாகப் பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், இம்முறை முறையான கவனம் செலுத்தப்பட்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார். மேலும், பாளி மற்றும் சித்திரப் பாடங்கள் ஒரே நேரத்தில் அமைந்திருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், பாளி மொழிப் பாடத்திற்குத் தோற்றும் பிக்குகளில் எவரும் சித்திரப் பாடத்திற்குத் தோற்றுவதில்லை எனவும், ஒரே ஒரு பிக்கு மட்டுமே சித்திரப் பாடத்தில் தோற்றுவதால் அங்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது எனவும் விளக்கமளித்தார்.

