புத்ராஜெயா, செப். 1 –
வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் நாடாளுமன்ற மக்களவையில் சமர்ப்பித்திருக்கும் உத்தேச நகர மறுமேம்பாட்டு சட்ட மசோதா ( Proposed URBAN RENEWAL ACT BILL) எவ்வித சமரசமும் இன்றி பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதை தலையாய இலக்காக கொண்டிருக்கிறது.
அதேசமயத்தில் உரிமையாளர்களின் முழு அனுமதியின்றி மடானி அரசாங்கம் அடையாளம் காணப்பட்டிருக்கும் பகுதிகளை மறுமேம்பாடு செய்யாது என்ற உத்தரவாதமும் இந்த உத்தேச சட்ட மசோதாவில் இணைக்கப்பட்டிருக்கிறது.
உரிமையாளர்கள் சம்மதித்தால் அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே மறு மேம்பாட்டின் கீழ் காலத்திற்கேற்ற நவீன, சௌகரியமான, கண்ணியமான வாழ்க்கையை வாழ்வர் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பண்பார்ந்த ஒரு சமுதாயத்தை உருவாக்கும் இந்த உன்னத நோக்கம் இப்போது அரசியலாக்கப்பட்டிருக்கிறது; இன ரீதியாகவும் விமர்சிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அவர்களின் அரசியல் ஆயுதமாக இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி இருக்கின்றனர்.
இந்த உத்தேச சட்ட மசோதா முதல் வாசிப்புக்காக மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்டது, எதிர்க்கட்சியினர் அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவதூறுகளை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர்.நியாயம் இல்லாத நில ஆக்கிரமிப்பு, பலவந்தமான வெளியேற்றம், ஏழை மக்கள் இடமாற்றம் போன்ற உண்மை இல்லாத குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளும் சில அரசு சாரா அமைப்புகளும் முன்வைத்து வருகின்றனர்.
இதற்கெல்லாம் தகவல் ஊடகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்குமாறு தொடர்புத் துறை அமைச்சரும் மடானி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளருமான டத்தோ ஃபாமி ஃபட்ஸில் தம்மை கேட்டுக்கொண்டதன் விளைவாகவே பத்திரிகை ஆசிரியர்களுடன் இச்சிறப்பு நேர்காணல் நடைபெறுகின்றது என்று ஙா கோர் மிங் தெரிவித்தார்.
இந்த உத்தேச சட்ட மசோதாவை ஜசெக-வைச் சேர்ந்த ஙா கோர் மிங் சமர்ப்பித்திருக்கிறார் என்பதுதான் அவர்களை உறுத்திக்கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.


மலேசியாவுக்கு உலகிலேயே நான்காவது இடம். உலகிலேயே மிக அதிகமான வானுயர கட்டடங்களை கொண்டிருப்பதில் மலேசியா நான்காவது இடத்தில் உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் மலேசியா அதன் 70 ஆவது சுதந்திரத் தினத்தை கொண்டாட உள்ளது.
அதே போல் மலேசியாவில் 70 ஆண்டுகளுக்கும் மேலான கட்டடங்கள் உள்ளன. இவற்றில் பாதிக்கு மேல் நலிந்தும் சிதிலமடைந்தும் உள்ளன. மனிதர்கள் போல் கட்டடங்களுக்கும் அவற்றின் ஆயுள் காலம் உள்ளது. இவற்றை எல்லாம் மக்கள் வாழ்வதற்கு உகந்த வகையில் மறு மேம்பாடு செய்வதற்கு இப்போதைக்கு சட்டம் இல்லை என்று அமைச்சர் கூறினார்.
அன்று அப்படி
இன்று இப்படி
இதற்கு முந்தைய அரசாங்கங்கள் அனைத்தும் நகர மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர். 2013 ஆண்டில் இருந்து இந்த நிலைப்பாடு உள்ளது.
இப்போது 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் மக்களுக்கு ஒரு கண்ணியமான மேம்பாட்டை கொண்டுவரும் அரசியல் நோக்கமும் திட்டமும் அந்த அரசாங்கங்களுக்கு இல்லை.
ஆனால் மடானி அரசாங்கம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சீரிய தலைமைத்துவத்தின் கீழ் மக்கள் நலன்களை முன்னுரிமையாகக் கொண்டு 70 ஆண்டுகள் பழைமை மிக்க, சிதிலமடைந்த கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு மக்கள் கண்ணியமாக வாழ்வதற்குரிய மறுமேம்பாட்டை கொண்டுவரும் இலக்கை கொண்டுள்ளது. செலாயாங், டேசா பக்தியில் 30 ஆண்டுகளுக்கு மேலான அடுக்குமாடி வீடுகள் பேய் வீடாக காட்சி அளிக்கிறது. இவற்றில் வாழும் ஏழை மக்களின் மனநிலையையும் சுற்றுச் சூழலையும் சற்று சிந்தித்து பாருங்கள்.


இதற்கு தான் முந்தைய அரசாங்கங்கள் மறு மேம்பாட்டுக்கு ஒப்புக்கொண்டன. ஆனால் செயல் இல்லை. இப்போது அதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கான இத்திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்று ஙா கோர் மிங் கேட்டுக்கொண்டார்.
534 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன
நகர மறுமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 534 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டு, எதிர்க்கட்சி நிர்வாகம் செய்யும் பெர்லிஸ், கெடா, திரெங்கானு, கிளாந்தான் ஆகிய மாநிலங்கள் உட்பட அனைத்து மாநில அரசாங்கங்களும் ஒப்புக்கொண்டுள்ளன.
அவர்களே ஒப்புக்கொண்டனர். அவர்களே அவர்களின் அரசு இதழில் (கெஸட்) பதிவும் செய்துள்ளனர். இப்போது இவர்கள் தான் எதிர்ப்பும் ஆட்சேபமும் தெரிவிக்கின்றனர். இதில் மத்திய அரசாங்கத்தின் பங்கு எதுவும் இல்லை. இவர்களுக்கு ஞாபக மறதி அதிகமாகவே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நகர மறுமேம்பாட்டுக்கு அடையாளம் காணப்பட்டிருக்கும் 534 பகுதிகளில் 22 இடங்கள் திரெங்கானுவில் உள்ளன. 2015 ஆம் ஆண்டிலேயே திரெங்கானு மாநில அரசாங்கம் மறுமேம்பாட்டுக்கு பரிந்துரை செய்து மாநில கெஸட்டிலும் பதிவு செய்துவிட்டது. 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. வேலை எதுவும் நடக்கவில்லை.
கெடாவில் 55 இடங்கள். 2018 இல் அதன் அரசு பதிவேட்டில் இடம்பெற்றுவிட்டது. ஆனால் அறவே வேலை நடக்கவே இல்லை. கோலாலம்பூரில் 139 பகுதிகள், கிளாந்தானில் 4, சிலாங்கூரில் 66, ஜோகூரில் 35, பகாங்கில் 58, பினாங்கில் 5, பேராக்கில் 85, நெகிரி செம்பிலானில் 49, மலாக்காவில் 9 பகுதிகள் நகர மறுமேம்பாட்டுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.
மடானி அரசாங்கத்தின் மீது அம்பு எய்தலாமா?
எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டுவிட்டு ஒன்றுமே செய்யாமல் நாற்காலியை மட்டும் இவ்வளவு காலமும் சூடேற்றிவிட்டு இப்போது எதிர்ப்பு தெரிவிப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
அவர்களே பரிந்துரைப்பார்கலாம் அவர்களே நிராகரிப்பார்கலாம். தர்க்க ரீதியில் ஜீரணிக்க முடிகிறதா? இந்த தரவுகள் என்னுடையது இல்லை. நகர், புறநகர் திட்டமிடல் இலாகா வழங்கியது ஆகும்.
2015 ஆம் ஆண்டு தரவுகள் இவை. அப்போது நான் எதிரணியில் இருந்தேன். அமைச்சராகக் கூட இல்லை. ஆனால் அவர்கள் இப்போது அரைவேக்காட்டுத்தனமாக பேசுகின்றனர். எதிர்க்கட்சிகளும் சில அரசு சாரா இயக்கங்களும் நான் மக்களவையில் சமர்ப்பித்திருக்கும் உத்தேச நகர மறுமேம்பாட்டு சட்ட மசோதாவை நிராகரிக்கும்படி அறிக்கை விடுகின்றனர். நம் மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை தர விரும்புகிறோம். ஆனால் அவர்கள் தடுக்கின்றனர் என்று ஙா கோர் மிங் கூறினார்.
10 கொள்கைகள்
உத்தேச நகர மறுமேம்பாட்டு சட்ட மசோதாவின் 10 கொள்கைகளை பட்டியலிடுகிறேன்:
1.முறையான பேச்சுவார்த்தையின் வழி உரிமையாளர்களின் ஒப்புதலை பெறுதல்.
ங்கு
2.நகர மறுமேம்பாட்டுக்குப் பின்னர் குடியிருப்பாளர்கள் அதே இடத்தில் குடியமர்த்தப்படுவர். 3.நில உரிமையாளர்களின் பாதுகாக்கப்படும். இப்பதிய சட்டமசோதாவில் இதற்கு உத்தரவாதம் உண்டு.
4.அடையாளம் காணப்பட்ட இடம் மறுமேம்பாடு செய்யப்படும் போது அங்கு வசித்தவர்கள் சௌகரியமான இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவர்.
5.நகர் மறுமேம்பாட்டு சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி கீழ் பாரபட்சமின்றி மறுமேம்பாட்டு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்படும்.
6.விவேக மாநகர், பேரிடர்களை தாங்கும் ஆற்றலை கொண்டிருக்கும் அம்சங்களைக் கொண்டு மேம்பாட்டு நிலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது.
7.மேம்பாட்டாளர் இன்றி அரசாங்கம் குடியிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் ஒப்புதலை பெற்று நகர் மறுமேம்பாட்டு சட்ட பரிந்துரை அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்.
8.மறுமேம்பாட்டில் ஆகக் கடைசியான தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்.
9.தற்போது நடைமுறையை பின்பற்றி மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்தல். 10.மேம்பாட்டுப் பணிகள் கட்டங்கட்டமாக மேற்கோள்ளப்படும்.
இவ்வாறு 10 கொள்கைகளையும் பட்டியலிட்ட அமைச்சர் சம்பந்தப்பட்ட மக்களுக்கும் நில உரிமையாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி அவர்களின் நலன்கள் முழுமையாக பாதிக்கப்படும் என்றார்.

இந்த உத்தேச சட்டம் நிறைவேறினால் முறையான பேச்சுவார்த்தை வழி நியாயம் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சருக்கு ஏகபோக அதிகாரமா?
உத்தேச நகர மேம்பாட்டு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ஏகபோக அதிகாரத்தை கொண்டிருப்பார் என்ற எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள், அரசு சாரா அமைப்புகள், குறைசொல்பவர்கள் ஆகியோரின் குற்றச்சாட்டுகளை ஙா கோர் மிங் அடியோடு நிராகரித்தார்.
மந்திரி பெசார், முதலமைச்சர் தலைமையிலான மாநில நிர்வாக செயற்குழுக்கள், நான் மட்டும் அன்றி டத்தோ பாண்டார், அரசாங்க தலைமைச் செயலாளர், தலைமை இயக்குநர், அரசாங்க பிரதிநிதிகள், நிபுணர்கள், ஆலோசகர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ள மத்திய அரசாங்க செயற்குழுவினர் கூட்டு முடிவை எடுப்பர். ஆனால் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள் திரித்துக் கூறிவரும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் அனைத்தும் அவதூறு ஆகும்.
சட்டம் இருந்தால் மேம்பாட்டாளர்கள் விருப்பம் போல் செயல்பட முடியாது. அனைத்தும் பேச்சுவார்த்தை வழி தீர்வுக்காணப்படும். உதாரணமாக ரசாக் மேன்சன். அந்த அடுக்குமாடி வீடுகளில் குடியிருந்தவர்களில் 33 குடும்பங்கள் மறுமேம்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அப்போதைய அரசாங்கம் பலவந்தமாக அவர்களை வெளியேற்றிவிட்டு நிலத்தை தன் வசமாக்கிக்கொண்டது. இழப்பீட்டை மட்டும் தந்துவிட்டு வெளியேற்றியது.
புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்குவந்தால் இதுபோன்ற பல்வந்த அபகரிப்புகள் இருக்காது. குடியிருப்பாளர்கள் அனுமதி பெறுவதற்கு மேம்பாட்டாளர் நடத்தும் பேச்சு வார்த்தையில் அமைச்சரும் நேரடியாக இருப்பார். இதன்வழி குடியிருப்பாளர்கள், நில உரிமையாளர்கள் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று ஙா கோர் மிங் தெரிவித்தார்.
மேலும் ஒரு குடியிருப்புப் பகுதியை மறுமேம்பாட்டுக்கு கையகப்படுத்துவதற்கு முன் அங்கு குடியிருக்கும் குடியிருப்பாளர்களில் 80 விழுக்காட்டினரின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
மூன்று அறைகள், இரண்டு குளியலறைகள்
உத்தேச மறுமேம்பாட்டு சட்டத்தின் கீழ் ஓர் அறை, ஒரு குளியலறை கொண்ட வீடுகள் மூன்று அறைகள், இரண்டு குளியல் அறைகளுடன் நவீன வசதிகளை கொண்டிருக்கும். வீட்டின் மதிப்பு பன்மடங்காக அதிகரிக்கும்.
இவ்வாறான கண்ணியமான வீடுகளை நம் மக்களுக்கு குறிப்பாக பி40 பிரிவினருக்கு வழங்குவதுதான் மடானி அரசாங்கத்தின் இலக்கு என்று ஙா கோர் மிங் சொன்னார். இந்த உத்தேச நகர மறுமேம்பாடு சட்டம் யாருக்கு? நம்முடைய மக்களை செல்வந்தர்களாக மாற்றுவதுதான் நோக்கம். அப்புறம் ஏன் அதனை எதிர்க்க வேண்டும் என்று வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் சாடினார்.




