புதுச்சேரி: புதுச்சேரியில் இப்போது என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அங்கு என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி முறியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்.. பின்னணியில் நடந்தது என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
புதுச்சேரியில் கடந்த முறை நடந்த சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து பாஜக ஆதரவுடன் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றார்.
ரங்கசாமி: அங்கு பாஜகவினர் சிலருக்கு அமைச்சர் பதவி தரப்பட்ட நிலையில், அமைச்சர் பதவி இல்லாத பாஜக எம்எல்ஏக்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இன்னும் சிலர் அமைச்சர் பதவி தர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், முதல்வர் ரங்கசாமி இந்த கோரிக்கைகளுக்கு எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. தொடர்ந்து மவுனம் சாதித்தே வந்தார்.
புதுச்சேரியில் இந்த கூட்டணி ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இப்போது முதல்வர் ரங்கசாமிக்கு எதிராகவே என்டிஏ எம்எல்ஏக்கள் புகார் அளிக்கத் தொடங்கியுள்ளனர். முதல்வர் ரங்கசாமி மீதும் அமைச்சர்கள் மீதும் அவர்கள் பல வித குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கே சென்று பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணனிடம் மனு கொடுத்தனர்.
பரபர ஆடியோ: இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை. அதேநேரம் இவர்கள் குற்றஞ்சாட்டுவது பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் மூலமாக வெளியானது. அதில் முக்கிய விவகாரங்களில் கூட முதல்வர் தங்களுடன் ஆலோசிப்பது இல்லை என்றும் ரெஸ்டோ பார்கள் திறந்ததில் ஊழல் நடந்துள்ளது என்றும் பல வித குற்றச்சாட்டுகளை அவர்கள் ஆளுநரிடம் முன்வைத்துள்ளனர்.
இந்தச் சூழலில் பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் திடீரென டெல்லி சென்றுள்ளனர். அங்கு அவர்கள் முக்கிய பாஜக தலைவர்கள் சந்தித்து ரங்கசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. முதல்வர் ரங்கசாமி செயல்பாடுகளால் அந்தக கூட்டணியில் உள்ள பாஜக மீதும் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
என்ன நடக்கும்: இது தொடர்பாகப் புதுச்சேரி பாஜக மாநில தலைவர் செல்வகணபதி கூறுகையில், “ஆளுநரைச் சந்திக்கும் முன்பு என்னை பாஜக எம்எல்ஏக்கள் தொடர்பு கொண்டார்கள். ஆனால் முதல்வர் மீது புகார் தெரிவிக்கும் திட்டம் குறித்து என்னிடம் எதுவும் சொல்லவில்லை. இப்போது அவர்கள் டெல்லியில் தேசிய தலைவர்களைச் சந்திக்கிறார்கள். இங்குச் சிக்கல் இருப்பதாக உணர்ந்தால் பாஜக பொறுப்பாளர்கள் இங்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் தரும் ரி்போர்ட் அடிப்படியில் முடிவு எடுக்கப்படும்” என்றார்.
உடையும் கூட்டணி: புதுச்சேரியில் கூட்டணியில் உள்ள முதல்வருக்கு எதிராகச் சொந்த கட்சி எம்எல்ஏக்களே திரும்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மிகப் பெரிய விவகாரமாக மாறினால்.. அது புதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
புதுச்சேரியைப் பொறுத்தவரைக் கடந்த 2021இல் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.. அங்கு மொத்தம் 30 சீட்கள் இருக்கும் நிலையில், அதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் வென்றது. மேலும், நியமன சுயேச்சை என பாஜக ஆதரவு மேலும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.


