Last Updated:
மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி கொலை வழக்கில் அவரது காதலன் சுனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி கொலை வழக்கில் அவரது காதலனே கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த 24 வயது மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி. இவர் தனது சகோதரியுடன் பானிபட் பகுதியில் வசித்து வந்தார். திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஷீத்தல் சிறு சிறு இசை ஆல்பங்களை தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜுன் 14ம் தேதி படப்பிடிப்புக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் ஷீத்தலின் சகோதரி பானிபட் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 16 ஆம் தேதி சோனிபட்டின் கார்கோடா பகுதிக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து ஷீத்தலின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடல் மற்றும் கைகளில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டது.
அவரது உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. தொண்டையும் அறுக்கப்பட்டிருந்தது. போலீசார் ஷீத்தலின் சகோதரியிடம் விசாரித்தபோது, ஷீத்தலின் காதலன் சுனில் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியிருக்கிறார். போலீசார் சுனிலைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. ஷீத்தலுடன் நெருக்கமாக பழகி வந்த சுனில் தனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது என்பதை மறைத்திருக்கிறார்.
இந்த தகவல் தெரிந்து அதிர்ச்சியடைந்த ஷீத்தல் சுனிலுடன் சண்டையிட்டுள்ளார். சம்பவத்தன்று இவர்களது சண்டை உச்சத்துக்குச் செல்ல, ஆத்திரம் தலைக்கேறிய சுனில் கத்தியால் ஷீத்தலை சரமாரியாகக் குத்தி காயப்படுத்தியதுடன், அவரது கழுத்தையும் அறுத்துள்ளார். பின் அவரது உடலை தனது காரில் வைத்து டெல்லி பேரலல் கால்வாயில் தள்ளி விட்டிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கால்வாயிலிருந்து அவரது காரும் மீட்கப்பட்டது. முதலில் அது ஒரு விபத்து என்று கூறி தப்பிக்க முயன்றிருக்கிறார் ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணைக்குப்பி பின் உண்மையை ஒப்புக் கொண்டார். மாடல் அழகி மரண வழக்கில் அவரது காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
June 18, 2025 5:28 PM IST
உடலில் இருந்த காயங்கள்.. மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி கொலை வழக்கில் வெளியான பகீர் தகவல் – காதலன் செய்த கொடூரம்!


