சிபிஎஸ்இ 2026-27 கல்வியாண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அச்சிட்டு வழங்கியுள்ள 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் “நீதித்துறையில் ஊழல்” என்ற தலைப்பில் ஒரு பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த பாடம் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் குறிப்பிட்ட பாடம் குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
நீதித்துறையில் ஊழல் இருப்பதாக பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் ஒருதலைபட்சமாக இருப்பதாக அவர்கள் வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை ‘தானாக முன்வந்து’ விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த விவகாரம் குறித்து கடுமையான அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, யாரும் நீதித்துறையை அவமதிக்க அனுமதிக்க மாட்டோம். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மிகக் கடுமையாகத் தெரிவித்தது.
பள்ளி மாணவர்கள் மத்தியில், நீதித்துறையைப் பற்றித் தவறான பிம்பத்தை உருவாக்குவது திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்று நீதிபதிகள் விமர்சித்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்லாது, பல்வேறு உயர் நீதிமன்ற நீதிபதிகளும், வழக்கறிஞர் சங்கங்களும் இந்த பாடத்தால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறினர்.
இந்த சர்ச்சைக்குரிய பாடத்தை எழுதியவர்கள் யார், எதன் அடிப்படையில் இந்தப் பகுதிகள் சேர்க்கப்பட்டன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், NCERT அமைப்புக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையை தொடர்ந்து மத்திய அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.
8-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் பாடம் சேர்க்கப்பட்டிருந்தது.நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் மக்கள் ஊழலை எதிர்கொள்கிறார்கள் என்றும், இது ஏழை எளியவர்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுக்கிறது என்றும் அந்தப் பாடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் சுமார் 81,000 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 62.4 லட்சம் வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 4.7 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகப் புள்ளிவிவரங்களும் இடம்பெற்றிருந்தன. 2017 முதல் 2021 வரை நீதித்துறைக்கு எதிராக 1,600-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது
கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதித்துறையில் ஊழல் நிலவுவது துரதிர்ஷ்டவசமானது என கூறிய வரிகள் பாடத்தில் இருந்தன. நீதித்துறையில் ஊழல் நிலவுவதை நீதிபதி ஒருவரே ஒப்புக்கொண்டாகவும் பாடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

