காலையில் மாநிலங்களவையை வழி நடத்திவந்த குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், இரவு தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், உடல்நலக் காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் அமைச்சரவை சகாக்களின் ஒத்துழைப்பு, ஆதரவிற்கு நன்றி கூறியுள்ள தன்கர், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் குடியரசுத் துணைத் தலைவராகப் பணியாற்றிய அனுபவத்தைப் பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக அளவிலான வளர்ச்சிப் பயணத்தில் பங்கெடுத்ததை நினைத்துப் பெருமை கொள்வதாகவும் ராஜினாமா கடிதத்தில் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கிதானா கிராமத்தில் 1951ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்த ஜெகதீப் தன்கர், தற்போது 74 வயதை நிறைவு செய்துள்ளார். பாஜகவில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய தன்கர், கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுடன் அவருக்கு மோதல் போக்கு நிலவியது.
இதைத் தொடர்ந்து, நாட்டின் 14ஆவது குடியரசுத் துணைத் தலைவராக பாஜக சார்பில் போட்டியிட்ட தன்கர், 182 வாக்குகளுடன் வெற்றி பெற்று, ஆகஸ்ட் 2022ஆம் ஆண்டு பதவியேற்றார்.
இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவராக மூன்று ஆண்டுகளைக் கூட நிறைவு செய்யாத தன்கர், திடீரென ராஜினாமா செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசின் மசோதாக்கள் தொடர்பான வழக்கில், ஆளுநர் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களில் முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தன்கர், குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா எனக் கேள்வி எழுப்பி அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். குடியரசுத் தலைவரை நீதிமன்றம் இவ்வாறு வழிநடத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் காட்டமாகக் கூறியிருந்தது பேசுபொருளாக மாறியது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், அனைவரை விடவும் அரசியலமைப்புதான் மேலானது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவரின் அதிகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. விசாரணையின்போது, தன்கரின் கருத்து குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் ராஜினாமா, கவனம் பெற்றுள்ளது. அதேநேரம், இதயம் தொடர்பான சிகிச்சைக்காக கடந்த மார்ச் மாதம் நான்கு நாட்கள் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
The sudden resignation of the Vice President and Chairman of the Rajya Sabha is as shocking as it is inexplicable. I was with him alongside a number of other MPs till around 5 PM today and had spoken to him over the phone at 7:30 PM.
No doubt Mr. Dhankar has to give topmost…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) July 21, 2025
இதனிடையே ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், திங்கட்கிழமை மாலை 5 மணி வரை அவருடன் இருந்ததாகவும், இரவு 7.30 மணியளவில் அவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்கரின் உடல்நிலைக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்றாலும், அவரது திடீர் முடிவுக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாக சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், பிரதமர் மோடி தன்கரை மனம்மாற்ற செய்வார் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் சபாநாயகருக்கான இடம் காலியான நிலையில், துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயணன் சிங், அவையை வழிநடத்தவுள்ளார். குடியரசுத் துணைத் தலைவரின் காலியிடத்தை 60 நாட்களில் நிரப்ப வேண்டிய சூழலில், அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் யார்..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
July 22, 2025 6:49 AM IST

