கோலாலம்பூர்:
மலேசியாவில் கரையான் அரித்து சேதமடைந்த ரிங்கிட் நோட்டுகளை வைத்திருப்பவர்கள், பேங்க் நெகாரா மலேசியாவின் (Bank Negara Malaysia) நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவற்றிற்கான மதிப்பை மீண்டும் பெற முடியும்.
மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாராவின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலின்படி, சேதமடைந்த அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பண நோட்டுகளை ஏதேனும் ஒரு வணிக வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.
உடனடி பண பரிமாற்றத்திற்கான நிபந்தனைகளாக,
சேதமடைந்த பண நோட்டில் குறைந்தபட்சம் 3-இல் 2 பங்கு (two-thirds) சேதமடையாமல் தெளிவாக இருக்க வேண்டும்.
பேரரசர் (Yang di-Pertuan Agong) உருவப்படத்தின் மீது எவ்வித கிறுக்கல்களோ அல்லது அரசியல் முழக்கங்கள் தொடர்பான எழுத்துக்களோ இருக்கக்கூடாது.
பிற தேவையற்ற அடையாளங்கள் அல்லது கிறுக்கல்கள் மூலம் நோட்டு பாழாக்கப்பட்டிருக்கக் கூடாது.
இத்தகைய தெளிவான நிலையில் உள்ள நோட்டுகளுக்கு வங்கிகள் அன்றைய தினமே உரிய தொகையை வாடிக்கையாளர்களுக்கு மறுமுதலீடு அல்லது மாற்றாக வழங்கும்.
மற்றையது கரையான் அரித்த நோட்டுகள், தீயில் எரிந்தவை மற்றும் மை சிந்திய நோட்டுகளை பேங்க் நெகாரா “சந்தேகத்திற்குரிய வழக்குகள்” (Doubtful cases) என்ற பிரிவில் வைத்துள்ளது.
இது குறித்துப் பேசிய பேங்க் நெகாரா அதிகாரி ஒருவர், “சந்தேகத்திற்குரிய வழக்குகள்” என்ற பிரிவில் வரும் நோட்டுகள் மத்திய வங்கியின் சிறப்புப் பரிசீலனைக்கு பிறகே மாற்றப்படும் என்று கூறினார். இருப்பினும், கரையான் அரித்த நோட்டுகளில் குறைந்தபட்சம் 2/3 பங்கு சேதமடையாமல் இருந்து, பேரரசரின் படத்தில் சேதம் இல்லை என்றால் முழுத் தொகையையும் திரும்பப் பெற அதிக வாய்ப்புள்ளது என்று அவர் உறுதியளித்தார்.
சமீபத்தில் மலேசிய பெண் ஒருவர் அலமாரிக்கு அடியில் சேமித்து வைத்திருந்த சுமார் 2,000 ரிங்கிட் (RM 2,000) மதிப்பிலான பணத்தை கரையான்கள் அரித்துச் சேதப்படுத்தியதை ‘Threads’ சமூக வலைத்தள பக்கத்தில் (@anak_orangsebelah) பகிர்ந்திருந்தார்.
அவர் வெளியிட்ட புகைப்படங்களில் RM20 நோட்டுகள் மூலையில் கடிக்கப்பட்டும், பெரிய துளைகளுடனும் காணப்பட்டன. இந்த பதிவு 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து வைரலானது. இதைப் பார்த்த சமூக வலைத்தளப் பயனர்கள், அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றுமாறு ஆலோசனை வழங்கினர். மேலும், பயனர் ஒருவர் தனது தந்தைக்கு நேர்ந்த இதே போன்ற அனுபவத்தில் RM10,000 பணத்தை மறுபடியும் பெற்றுக்கொண்டதை நினைவுகூர்ந்தார்.



