ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்துவரும் போர் முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. போர்க்களத்தில் மோதல்கள் நீடித்தாலும், மறுபுறம் தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் வரும் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஜெர்மனியில் முனிச் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference 2026) நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “உக்ரைனின் நீண்ட காலப் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டப்பூர்வமாக வலுவான ஒப்பந்தங்கள் அவசியம். அமெரிக்கா தற்போது 15 ஆண்டுகாலப் பாதுகாப்பு ஏற்பாட்டை முன்மொழிந்துள்ள நிலையில், அதனை 20 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்.
2027-ம் ஆண்டிற்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உறுதியான தேதியை ஐரோப்பிய நாடுகள் அறிவிக்க வேண்டும். எங்கள் மக்கள் அங்கே வாழ்கிறார்கள்.
அதேநேரம், அமைதிக்காக டான்பாஸ் (Donbas) பிராந்தியத்திலிருந்து உக்ரைன் பின்வாங்க வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்க முடியாது. அமைதிக்கான சமரசங்கள் பெரும்பாலும் உக்ரைன் தரப்பிலிருந்தே எதிர்பார்க்கப்படுவது அதிருப்தியளிக்கிறது.

மேலும், உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களும் கவலையளிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த அழுத்தம் கொடுத்து வருகிறார். எப்போது போர் நிறுத்தம் ஏற்படுகிறதோ, அதிலிருந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகே உக்ரைன் தேர்தல்களை நடத்த முடியும்.” எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

