International
oi-Mani Singh S
மாஸ்கோ: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில் ரஷ்யா கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக ராணுவத்தில் மனிதவளம் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாட்டவர்களை சேர்த்து வருகிறது. தற்போது வெளிநாட்டவர்களுக்கு 16 லட்ச ரூபாய் கொடுத்து ராணுவத்தில் சேர தூண்டில் போட்டு வருகிறதாம்.
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் கடும் கோபம் அடைந்த ரஷ்ய அதிபர் புதின், அந்த நாட்டின் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிர்வரி மாதம் போர் தொடுத்தார். 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இருநாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், பெரும் பொருட்செலவையும் மனித ஆற்றலையும் ரஷ்யாவும் உக்ரைனும் இழந்து வருகின்றன.

திண்டாடும் ரஷ்யா
உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் நிதி உதவி அளிப்பதால் ரஷ்யாவை ஒரு கை பார்த்து வருகிறது. இதனால், எளிதில் போரை முடித்துவிடலாம் என்று நினைத்த ரஷ்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உக்ரைனுக்கு எதிரான போரில் வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால் வெளிநாட்டவர்களையும் ரஷ்யா தனது ராணுவத்தில் சேர்த்து வருகிறது.
மற்ற வேலைகளுக்காகவும் கல்விக்காக செல்பவர்களும் கூட சில நேரங்களில் மோசடியாக ராணுவத்தில் சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், ராணுவத்தில் சேருபவர்களுக்கான ஊக்கத்தொகையை ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பிராந்தியம் கடுமையாக உயர்த்தியுள்ளது. வெளிநாட்டவர் அல்லது நாடற்ற நபர்கள் ரஷ்யாவில் சேர்ந்தால் அவர்களுக்கு 16 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் சேர
இர்குட்ஸ்க் மாகாணம் மட்டும் இன்றி பல்வேறு மகாணங்களும் வெளிநாட்டவர்கள் ராணுவத்தில் சேர்ந்தால் வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தியுள்ளன. ஸ்மோலென்ஸ்க் மாகாணத்தில் ராணுவ வீரர்களை சேர்ப்பவர்களுக்கான தொகை 1.15 லட்சம் ரூபிளில் இருந்து 10 லட்சம் ரூபிளாக உயர்த்தப்பட்டுள்ளது. ரியாசான் மாகாணத்தில் 8.05 லட்சம் ரூபிளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்தவர்களை ரஷ்யா தனது ராணுவத்தில் அதிக எண்ணிக்கையில் சேர்த்து வருவதாக கூறப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தற்போது வரை பலன் கிடைக்கவில்லை. கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீது வான்வழி தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. பதிலடியாக ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.
டிரம்ப் கோரிக்கை
ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய எண்ணெய் கட்டமைப்பு மீதான தாக்குதலால் சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதால் அவற்றை நிறுத்துமாறு டிரம்ப் கூறியிருந்தார். அமெரிக்கா – ஈரான் போரால் எண்ணெய் விநியோகம் ஒருபக்கம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சர்வதேச அளவில் எண்ணய் விநியோகத்தை கடுமையாக பாதித்துள்ளது.



