Last Updated:
“போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் நலனுக்காக போராடி வருகின்றனர். வெளிநாடுகளுடன் தொடர்பில் இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி
ஈரானில் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தவறினால் ஈரான் ராணுவத்தினரை சுட்டுக் கொல்வோம் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலுடன் கடந்த ஆண்டு ஏற்பட்ட போர் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள ஈரானில், அரசுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் 10 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் நிலையில், ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி அழைப்பின் பேரில் நாடு முழுவதும் மக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது.

கடந்த 28-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இதுவரை 9 குழந்தைகள் உட்பட 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் நலனுக்காக போராடி வருவதாகவும், வெளிநாடுகளுடன் தொடர்பில் இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், கடந்த காலங்களைப் போன்று, மக்களை சுட்டுக் கொன்றால், அமெரிக்கா தலையிட நேரிடும் என்றும், ஈரான் ஆட்சியாளர்களுக்கு வலிக்கும் இடத்தில் கடுமையாக தாக்குவோம் என்றும் எச்சரித்தார்.


