அவர் ஏற்கனவே, ஹமாஸால் கடத்தி வைக்கப்பட்டுள்ள , இன்னும் விடுவிக்கப்படாத, சுமார் 100 இஸ்ரேலியர்களை விடுவிப்பதில் முன்னுரிமை தரவேண்டும் என்று இஸ்ரேலியப் பொதுமக்களில் ஒரு கணிசமான பகுதியினரிடமிருந்து அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைமைவாத லிக்குத் கட்சியின் தலைவரான பெஞ்சமின் நெதன்யாகு, சில அதி தீவிர வலதுசாரிக் கட்சிகளின் தயவில்தான் அரசதிகாரத்தில் இருக்கிறார். அந்த அழுத்தம் வேறு அவரது கடும்போக்கிற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
எனவே இந்த காஸா போரின் கடந்த இருமாதங்களாகவே இஸ்ரேலின் கவனம் ஹிஸ்புல்லா மீதும் திரும்பியது. சர்வதேச பாதுகாப்பு வல்லுனர்களையே அசரவைத்த அந்த பேஜர்கள் வெடிப்பு நிகழ்வு இந்த பின்னணியில்தான் நடந்தது.
ஹிஸ்புல்லா போன்ற போராளி அமைப்புகளின் தலைமைகள் தங்கள் போராளிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்க பயன்படுத்து பேஜர்கள் ( Pagers) 1990களின் இறுதியில் மொபைல் தொலைபேசிகள் வருவதற்கு சற்று முன்னால் புழக்கத்துக்கு வந்த கருவி.
அதன் புதிய , நவீனப்படுத்தப்பட்ட மாடல்களை ஒரு தைவான் நிறுவனத்திடமிருந்து ஹெஸ்பொல்லா வாங்கியிருந்தது. அந்த நிறுவனத்திற்கு இந்தக் கருவிகளின் உதிரிப்பாகங்களை வழங்கும் பல நிறுவனங்களில் ஊடுருவியிருந்த மொசாத் அமைப்பு , அந்தக் கருவிகளில் வெடிபொருட்களை நிரப்பியதுடன், அவைகளை ரிமோட் கண்ட் ரோல் மூலம் இயக்கி வெடிக்க வைக்கும் வசதியையும் பெற்றிருந்தது.
இந்த பேஜர் வெடிப்பு சம்பவங்களில் சுமார் 3,000 ஹெஸ்பொல்லா போராளிகள் காயமடைந்தனர், பலரும் செயல்பட முடியாதபடி உடல் உறுப்புக்களை இழந்தனர், சிலர் கொல்லப்பட்டனர் என்று தெரிகிறது.
இந்த சம்பவம் நடந்து சில நாட்களிலேயே, பெய்ருட்டில் பதுங்கும் இடம் ஒன்றில் நடந்த சந்திப்புக்கு வந்திருந்த ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நசரல்லா இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஹசன் நசரல்லாவின் படுகொலை இஸ்ரேலுக்கு கிடைத்த மற்றொரு முக்கியமான ராணுவ வெற்றிதான் , இது ஹிஸ்புல்லா அமைப்பை தற்காலிகமாக பலவீனமாக்கும் என்றாலும், ஹிஸ்புல்லாவின் கதை இத்தோடு முடிந்துவிட்டது என்று சொல்லமுடியாது.
ஹசன் நசரல்லாவுக்குப் பின் யார் அந்த அமைப்புக்கு தலைமை தாங்குவார், அவர் எந்த அளவுக்கு நசரல்லா போலவே இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்திச்செல்வார் என்பதைப் பொறுத்தே அந்த இயக்கத்தின் எதிர்காலம் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
ஈரானிய சிக்கல்
இதனிடையே , லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்கள், நசரல்லா கொலை ஆகியவை ஹிஸ்புல்லாவின் ஆதரவு நாடான ஈரானுக்கு பெரும் பிரச்சனையைத் தோற்றுவித்திருக்கின்றன.
மத்தியக் கிழக்கு பிராந்தியத்தின் பெரிய ஷியா சக்தி, ஈரான்.

ஈரானின் ஆதரவுடன் வளர்ந்து இயங்கிவரும் இயக்கங்கள்தான் ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ; இந்த இரு அமைப்புகளும் ஷியா முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்து அமைப்புகள் என்றாலும், ஹமாஸ் இயக்கம் காஸா பகுதியில் பிரதிநிதித்துவப்படுத்துவது சன்னி முஸ்லீம்களைத்தான். அவர்களையும் ஈரான் ஆதரிப்பது அதன் பிராந்திய அரசியல் மற்றும் அமெரிக்க எதிர்ப்பு அரசியல் காரணங்களுக்காக என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

