Last Updated:
அமெரிக்க ராணுவம் நடத்திய அதே தாக்குதல் அளவுக்கு ஏவுகணைகள் கத்தார் அமெரிக்க தளங்கள் மீது வீசப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது. கத்தார் நாட்டில் இந்தியர்கள் கணிசமாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தலை இந்திய தூதரகம் வெளியிட்டு இருக்கிறது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தற்போது அமெரிக்கா தலையிட்டு இருப்பதால், பதற்றம் பல மடங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் போர்டோ, நடான் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதலை நடத்தி இருக்கிறது.
இதில் போர்டோ அணு உலை முற்றிலும் அழிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இது ஈரான் ராணுவம் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி உடனடியாக கொடுக்கப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நாடு ஏவுகணை தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது.
கத்தாரின் அல் உபைத் தளத்தில் இந்திய அமெரிக்காவின் அதிகப்படியான ராணுவ தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்தார் நாட்டின் மீது 10 ஏவுகணைகளும், ஈராக் மீது 1 ஏவுகணையும் வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஈரான் நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய அதே தாக்குதல் அளவுக்கு ஏவுகணைகள் கத்தார் அமெரிக்க தளங்கள் மீது வீசப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே கத்தார் நாட்டில் கணிசமாக இந்தியர்கள் இருப்பதால், அவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை இந்திய தூதரகம் வழங்கியுள்ளது.
In view of the ongoing situation, Indian community in Qatar is urged to be cautious and remains indoors. Please remain calm and follow local news, instructions and guidance provided by Qatari authorities. The Embassy will also keep updating through our social media channels.
— India in Qatar (@IndEmbDoha) June 23, 2025
அதாவது, கத்தாரில் உள்ள இந்தியர்கள் வீட்டிற்குள்ளே பத்திரமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், உள்ளூரில் வெளிவரும் செய்திகள், உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் தகவல்கள், அவர்களது வழிகாட்டுதலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். மேலும், இந்திய தூதரகத்தின் சமூக வலைத்தள பக்கங்களை உன்னிப்பாக இந்தியர்கள் கவனித்து வர வேண்டும் என்றும் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
June 23, 2025 11:56 PM IST


