International
oi-Mani Singh S
டெல் அவிவ்: ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதால், இஸ்ரேலும் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளது. மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், இதற்கு முன்பைவிட மிகப் பெரிய வலிமையுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் அமெரிக்கா – ஈரான் இடையே யுத்தம் நடைபெற்று வந்தது. 100 நாட்களுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம் 18 ஆம் தேதி இடைக்கால ஏற்பாடாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

பெரும் படையுடன் தாக்குவோம் – இஸ்ரேல்
அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் தங்கள் வகுத்த பாதையில் செல்லாமல் வேறு வழியை பயன்படுத்திய சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், கோபம் அடைந்த டிரம்ப், ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். அதோடு, ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்துவேன் என்றும் கார்க் தீவை கைப்பற்ற போவதாகவும் டிரம்ப் மிரட்டினார். அவர் சொன்னபடியே ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை தொடங்கியது.
பதிலுக்கு ஈரானும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. மீண்டும் முழு வீச்சில் ஈரான் – அமெர்க்கா இடையே போர் மூண்டு இருப்பது மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் ஈரான் மீது பெரும் படையுடன் தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேலும் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கட்ஸ் இது குறித்து கூறுகையில், தேவைப்பட்டால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தங்கள் நாடு தயாராகி வருகிறது.
வலிமையுடன் திரும்புவோம்
பெரும் படையுடன் இந்த தாக்குதலை நடத்துவோம் என்று உறுதியளிக்கிரேன். போரை மீண்டும் தொடங்குவதற்கான முழு தயார் நிலையுடன் எங்கள் ராணுவம் உள்ளது. வான்வழி தாக்குதல்கள் மூலம் ஈரானில் உள்ள அச்சுறுத்தல்களை முற்றிலுமாக அழிக்க ராணுவம் தயாராக உள்ளது. தேவைப்பட்டால் மூன்றாவது முறையாகவும் தாக்குதல் நடத்துவோம்.
மீண்டும் போர்க்களத்துக்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், இதற்கு முன்பைவிட அதிக வலிமையுடன் திரும்புவோம்” என்றார். இதே நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் மீது இதற்கு முன்பு எடுக்கப்பட்ட இரண்டு நடவடிக்கைகள் மூலம், அந்த நாடு பலவீனம் அடைந்துள்ளது” என்றார்.



