• Login
Sunday, March 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ – நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

GenevaTimes by GenevaTimes
February 28, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ – நட்பு,  பகையான பின்னணி | Iran vs Israel
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்)

மேனாள் ஆசிரியர் , பிபிசி உலகசேவை கட்டுரையாளர்: மணிவண்ணன் திருமலை

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் ஒரு முக்கிய கேள்வி – இரு நாடுகளும் அண்டை நாடுகள் அல்ல, இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சனை ஏதும் இல்லை.  இந்த மோதலுக்கு என்ன காரணம் ?

இந்த கேள்விக்கு விடை காண ஈரான் – இஸ்ரேலிய உறவுகளின் கடந்த குறைந்தது சுமார் 40 ஆண்டுகால வரலாற்றைப் பார்க்கவேண்டும்.

இஸ்ரேல், வரலாற்று ரீதியான பாலத்தீன மண்ணில் 1948ல் ஒரு தனி நாடாக  மேற்குலக உதவியுடன் உருவாக்கப்பட்டதிலிருந்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான உறவுகள் சுமூகமாக இருந்திருக்கின்றன. அதாவது ஈரானில் 1979ல் இஸ்லாமியப் புரட்சி நடந்து மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு ,  நாடு ஒரு இஸ்லாமியக் குடியரசாக அறிவிக்கப்படும்வரை.

1979க்கு முன் நடந்த முகமது ரேசா பஹ்லவியின் மன்னராட்சி ஈரானில் 1953ல் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஆதரவுடன் நடந்த அதிரடி ஆட்சி மாற்றத்துக்குப் பின் உருவானது.  மேற்குலக நாடுகளின் ஆதரவில் ஆட்சிக்கு வந்த பஹ்லவி,  ஈரானை இரும்புக் கரம் கொண்டு ஆண்டு வந்தார்.

இஸ்ரேலும் ஈரானும் அந்தக்காலத்தில் நட்பு நாடுகள்.  இஸ்ரேலுடன் உறவு என்பதை மன்னர் பஹ்லவி அரசு,  அரபு தேசியவாதத்தை எதிர்கொள்ளவும்,  சோவியத் ஒன்றிய செல்வாக்கை கட்டுப்படுத்தவும் ஒரு கருவியாக நினைத்தார்.

மன்னர் முகமது ரேசா பஹ்லவி

 ஆரம்ப கால நட்பு!

1950-களிலேயே இஸ்ரேலை தனி நாடாக ஈரான் அங்கீகரித்தது.  இஸ்ரேலை அங்கீகரித்த முதல் சில இஸ்லாமிய நாடுகளில் ஈரானும் ஒன்று என்ற தகவல் இன்று ஈரான்- இஸ்ரேல் உறவுகளின் நிலையைப் பார்ப்போருக்கு ஆச்சரியத்தைத் தரும்.  

இன்று ட்ரம்ப்பும், இஸ்ரேலும் அழித்தொழிக்கத் துடிக்கும் ஈரானின் அணு சக்தித் திட்டத்துக்கு அந்தக் கால கட்டத்தில் ஆரம்ப விதையே அமெரிக்கா போட்டதுதான்.  அமைதிக்கான அணுசக்தி  “ Atoms for Peace”  என்ற அமெரிக்க திட்டத்தின் உதவியுடன் தான் ஈரானிய அணு சக்திக் கனவு தொடங்கியது.  அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் காலத்தில் 1953ல் ஈரானுடன் அமெரிக்கா இந்த திட்டத்தின் அடிப்படையில் அணு சக்தி நிலையத்தை உருவாக்கி,  அதை இயக்க பயிற்சியும் எரி பொருட்களும் தந்தது. பின்னர்  ஈரான் 1968ல் அணு ஆயுதப் பரவலாக்கல் தடை ஒப்பந்தத்தில் ( Nuclear Non Proliferation Treaty) கையெழுத்திட்டது.  

ஆனால் 1979ல் அயோதுல்லா கொமெனியின் தலைமையில் இஸ்லாமியப் புரட்சி நடந்து மன்னராட்சி கவிழ்ந்த பின்னர், ஈரானின் நிலைப்பாடு மாறியது.  இஸ்ரேலையும், அமெரிக்காவையும்,  மேற்குலகையும் ஈரான் விரோத நாடுகளாகப் பார்க்கத்தொடங்கியது. இஸ்ரேலுக்கு தனிநாடாக இருக்க உரிமையே இல்லை என்ற நிலைப்பாட்டை  கோமெனி அரசு எடுத்தது.  அமெரிக்காவை “சாத்தான்” என்று தொடர்ந்து விமர்சித்த கோமெனி அரசு ,  ஈரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு பெரும் சர்வதேச நெருக்கடியை உருவாக்கியது. 

மத்திய கிழக்கில் ஆதிக்கப் போட்டியும் ஈரானும்!

ஈரான் ஒரு ஷியா பெரும்பான்மை நாடு. மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளில் பெரும்பாலானவை சுன்னி பெரும்பான்மை நாடுகள்.  லெபனான், ஈராக் மற்றும் பஹ்ரைன் போன்ற சில நாடுகளில்தான் ஷியா அல்லது ஷியா பிரிவினரின் உட்பிரிவினர்  கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். 

மத்தியக் கிழக்கில் யார் செல்வாக்கு செலுத்துவது என்ற ஆதிக்கப்போட்டியில் ஈரான் 1979-க்குப் பிறகு எடுத்த நடவடிக்கைகள் மற்ற இஸ்லாமிய நாடுகளை, குறிப்பாக சௌதி அரேபியாவை,  எரிச்சலடைய வைத்தன. 

இந்த நிலையில் இஸ்‌ரேலுக்கு எதிராக சண்டையிடும் ஹமாஸுக்கு ( அது ஒரு சுன்னி இஸ்லாமிய அமைப்பாக இருந்தாலும்) ஈரான் அளித்த நிதி மற்றும் ஆயுத உதவி இஸ்ரேலுக்கு கடும் கோபத்தைத் தந்தது.  

இஸ்ரேல் - ஈரான்
இஸ்ரேல் – ஈரான்

இஸ்‌ரேலின் வட பகுதி நாடான லெபனானிலும் இதே கதைதான். லெபனான் கிறித்தவர்கள்,  ஷியா மற்றும் சுன்னி முஸ்லீம்கள் கலந்து வாழும் ஒரு நாடு.  அது பிரான்சிடமிருந்து 1943ல் விடுதலை பெற்றபோது , இந்த மூன்று சமூகங்களிடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது.  அந்த ஒப்பந்தத்தின்படி அப்போது பெரும்பான்மையாக இருந்த கிறிஸ்தவர்களுக்கு ஜனாதிபதி பதவி, அடுத்த பெரிய சமூகமான சுன்னி முஸ்லிம்களுக்கு பிரதமர் பதவி மற்றும் ஷியா பிரிவினருக்கு நாடாளுமன்ற சபாநாயகர் பதவி என்று பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது. 

இந்த ஒப்பந்தம் காலப்போக்கில் மக்கள் தொகை மாற்றத்தால் பின்னர் பிரச்சனைக்குள்ளாகி, லெபனானில் 1975-90ல் பெரும் உள்நாட்டுப் போர் வெடித்தது. இந்தப் பிரச்சனையின் போது உருவானதுதான் ஹெஸ்பொல்லா இயக்கம் . 

இதற்கு ஈரானின் கோமெனி அரசு அளித்து வந்த ஆதரவு இஸ்ரேலுக்கு பெரும் தலைவலியைத் தந்தது.  

இதே போல சமீபத்தில் யேமனின் கிளர்ச்சிக் குழுவான ஹூத்திகளுக்கும் ஈரான் தரும் ஆதரவும் பிராந்திய அளவில் ஈரான் தனது மேலாண்மையை நிலை நிறுத்தச் செய்துகொள்ளும் ஒரு யுக்தியாகவே, இஸ்ரேலும், சௌதி அரேபியாவும் பார்க்கின்றன. 

ஹமாஸ் இயக்கம் சுன்னி பிரிவு அமைப்பு  என்றாலும், ஈரான் அதற்கு அளித்து வந்த நிதி மற்றும் ஆயுத உதவி , ஈரானின் மத்தியக் கிழக்கு அரசியல் கொள்கையின் ஒரு அம்சமாகும்.  

பாலத்தீன அரசியலில், யசேர் அராபத்தின் பாலத்தீன விடுதலை அமைப்பு ( PLO)  பலவீனமடைந்த 1990களில் ஹமாஸ் சக்தி வாய்ந்த அமைப்பாக காசா பகுதியில் உருவெடுத்தது. 

இஸ்ரேலுக்கு தனி நாடாக இருக்க உரிமை இல்லை என்ற கொள்கையுடைய ஹமாஸுக்கு ஈரான் அளித்த ஆதரவு , இரு நாடுகளிடையே உறவுகளை மேலும் பாதித்தது.

இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம்

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் கொலை

கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலில் ஊடுருவி நடத்திய பெரும் தாக்குதலுக்குப் பின்னர், ஹமாஸை அழித்தே தீருவேன் என்று சூளுரைத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவின் மீது தொடர் தாக்குதல்களை நடத்தினார்.

அந்த நடவடிக்கையில் இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகப்பெரிய  வெற்றிகளில் ஒன்று, 2024ல் ஈரானின் புதிய அதிபராக மசூத் பெஷெஸ்கியன் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு டெஹ்ரான் வந்திருந்த ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹானியேவை அவர் தங்கியிருந்த வீட்டிலேயே கொன்றதுதான்.  

இஸ்மாயில் ஹனியா இறுதி ஊர்வலம்

ஈரான் அரசுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்த இந்த நிகழ்வு இரு நாட்டு உறவுகளை மேலும் பதற்றத்தில் ஆழ்த்தியது. ஈரான் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.  இஸ்ரேலின் ஏவுகணைத் தற்காப்பு கவச அமைப்பு இந்தத் தாக்குதல்களை பெருமளவு முறியடித்த நிலையிலும்,  பின்னர் இஸ்ரேலும் இதற்கு பதிலடியாக ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் ஒன்றை நடத்தியது. 

இதே போல ஹெஸ்பொல்லா அமைப்பின் பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் பல ஆண்டுகளாகக் குறிவைத்துக்கொண்டிருந்தது.  

இஸ்ரேல் மீது ஹமாஸின் 2023 தாக்குதலுக்குப் பின்னர் ஹமாஸுக்கு ஆதரவாக தெற்கு லெபனானிலிருந்து இஸ்ரேலை நோக்கி பல ராக்கெட் தாக்குதல்கள் நடத்திய ஹெஸ்பொல்லா இயக்கத்தின் தலைமைச் செயலர் முல்லா நஸ்ரல்லாவை நேரம் பார்த்து கடந்த ஆண்டு நடத்திய ஒரு வான் தாக்குதலில் இஸ்ரேல் படுகொலை செய்தது. இது ஹெஸ்பொல்லாவிற்கும், அதன் “போஷகர்” ஈரானுக்கும் பேரிடியாக அமைந்தது. 

ஈரானின் ஆதரவு பெற்ற மற்றொரு கிளர்ச்சிக்குழு அமைப்பான யேமென் நாட்டின் ஹூத்திக்குழுவும், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை அடுத்து, இஸ்ரேலை தாக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் பல முறை ஹூத்திக் குழுவினர் மீது, யேமனின் தலைநகர் சனா மீதும் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. 

மீண்டும் பலம் பெறுமா ?அச்சாணி உடைந்ததா ?

 ஹூத்திகள்,  ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாஸ் ஆகிய இந்த மூன்று அமைப்புகளுமே ஈரானால் அமெரிக்க – இஸ்ரேல் “எதிர்ப்புக்கான அச்சாணி”  (Axis of resistance) என்று வர்ணிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணியின் உறுப்பினர்கள்.   சிரியாவில் பஷார் அல் அசாத் ஆட்சி கடந்த ஆண்டு அகற்றப்படும்வரை சிரியாவும் இந்த கூட்டணியில் இருந்து வந்தது.  

இந்தக் கூட்டணி அமைத்து , இதன் மூலம் அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணிக்கும், பிற சுன்னி நாடுகளுக்கும் ஈரான் தொல்லை தந்து கொண்டிருந்தது என்பதுதான் இஸ்ரேலிய அரசின் தொடர்ச்சியான வாதம்.

ஈரானுக்கு எதிராக தற்போது இஸ்ரேலின் தாக்குதல்கள் இந்தப் பின்னணியில்தான் பார்க்கப்படவேண்டும்.  

ஈரான் தன்னுடைய இருத்தலுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பதாக இஸ்ரேல் கருதுகிறது.  குறிப்பாக ஈரானின் “முல்லாக்கள் அரசு”  அகற்றப்படவேண்டும் என்பதை இப்போது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏறக்குறைய வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.

நெதன்யாகு, அலி கொமேனி

ஈரானின் அணு சக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை நடத்திவந்த இந்த காலகட்டத்தில்,  அதுவும் குறிப்பாக, கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி ஒமானில் மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவிருந்த சூழலில் ,  கடந்த ஆண்டு ஜூன் 13ம் நாள் ஈரானின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்தது, அந்தப் பேச்சுவார்த்தைகளில்  ஈரான் கலந்து கொள்வதையே தடுத்தது.  

பேச்சுவார்த்தை போன்ற ராஜீய வழிமுறைகள் மூலம் தனது அணு சக்தி திட்டத்தை கட்டுப்படுத்திக்கொண்டு , ஈரான் ரகசியமாக அணு ஆற்றல் பெற்றுவிடும் என்ற இஸ்ரேலின் அச்சமே இதற்குக் காரணம் என்று அரசியல் நோக்கர்கள்  கூறுகிறார்கள். 

ஈரானில் ஆட்சிமாற்றம் மூலம் அதன் அணு சக்தி திட்டத்தை நிர்மூலமாக்கலாம், மத்தியக்கிழக்கு பகுதியில் தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம் என்று இஸ்ரேல் கருதுகிறது.  இது பலிக்குமா என்பதை இந்த சுற்று போரின் முடிவுதான் தீர்மானிக்கும். 

ஈரான் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஈரானின் அணு வல்லமையை தகர்க்குமா, அல்லது மேலும் கூடுதலாக  ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா ,  ஈரானின் “எதிர்ப்புக்கான அச்சாணி” அமைப்புகள் பலவீனமடைந்துள்ள சூழலில் அவை மீண்டும் பலம் பெறுமா என்பதெல்லாம் முக்கிய கேள்விகள்.!

Read More

Previous Post

News18 Rising Bharat Summit 2026 | “உலகில் இந்திய பங்குச் சந்தை செயல்திறன் தனித்துவமானது” – SEBI கமலேஷ் சந்திரா! | வணிகச் செய்திகள்

Next Post

2025-ஆம் நிதியாண்டிற்காக ஊழியர் சேம நிதி (EPF/KWSP) 6.15% லாபப்பங்கை அறிவித்துள்ளது – Malaysiakini

Next Post
2025-ஆம் நிதியாண்டிற்காக ஊழியர் சேம நிதி (EPF/KWSP) 6.15% லாபப்பங்கை அறிவித்துள்ளது – Malaysiakini

2025-ஆம் நிதியாண்டிற்காக ஊழியர் சேம நிதி (EPF/KWSP) 6.15% லாபப்பங்கை அறிவித்துள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin