ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை முன்பை விட இன்னும் தீவிரமாக மீண்டும் தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்த அவர், “முன்பு அவர்களை அழித்ததை விடச் சிறந்த, இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிக வலிமையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை நாங்கள் எங்கள் போர்க்கப்பல்களில் தயார்நிலையில் ஏற்றி வருகிறோம்.
ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லையென்றால் அமெரிக்கா அவற்றை மிகவும் திறம்படப் பயன்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் முடிவு
ஈரானியர்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்காக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடையுமா என்பது இன்னும் 24 மணிநேரத்தில் தெரிந்துவிடும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

image Credit: DD India
மேலும், ஈரானின் முரண்பட்ட நிலைப்பாடு குறித்தும் தனது சந்தேகத்தை வெளிப்படுத்திய அவர், “உண்மையைச் சொல்கிறார்களா இல்லையா என்று கூட கணிக்க முடியாத நபர்களைத்தான் நாம் கையாண்டு வருகிறோம்; நம் முகத்திற்கு நேராக அனைத்து அணு ஆயுதங்களையும் அகற்றிவிட்டோம் என்று கூறும் அவர்கள், வெளியில் பத்திரிகையாளர்களிடம் சென்று அணுசக்தியைச் செறிவூட்ட விரும்புவதாகக் கூறுகிறார்கள்.
எனவே, உண்மையில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் விரைவில் அறிந்துகொள்வோம்,” என்று மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
