Last Updated:
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ், இன்று மாஸ்கோவில் ரஷ்யா அதிபர் புதினை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஈரான் வெளியுறவுத் துறை இன்று ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, ரஷ்யா, ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் பதில் தாக்குதலையும் நடத்தி வருகிறது. இரு நாட்டு மோதலாக நீடித்துவந்த இதில், அமெரிக்கா தலையிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் இஸ்பகான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. குண்டுகளை வீசித் தாக்கும் அதிநவீன பி-2 போர் விமானங்கள் ஈரானின் மூன்று அணு உலைகள் மீது குண்டுகளை வீசியுள்ளன. போர்டோ அணு உலை மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியதாகவும், இதில், அந்த அணு உலை முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக அமெரிக்காவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ், இன்று மாஸ்கோவில் ரஷ்யா அதிபர் புதினை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின், “ஈரான் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க ரஷ்யா நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. ஈரான் மீது நடைபெற்ற தன்னிச்சையான தாக்குதல் நியாயமற்றது, அடிப்படை ஆதாரமற்றது” எனத் தெரிவித்துள்ளார்.
June 23, 2025 5:39 PM IST
ஈரானுக்கு உதவ முன்வந்த ரஷ்யா… வெளியுறவுத் துறை அமைச்சருடன் சந்திப்புக்கு பின் முக்கிய முடிவு


