International
oi-Vignesh Selvaraj
தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்த வீட்டின் மீது அமெரிக்காவின் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி போர் நிறுத்தம் வந்தது. சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள லராக் தீவை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடத்தின. அந்தத் தீவில் அமைக்கப்பட்டிருந்த 2 ஏவுகணை தளங்கள், கடல் கண்ணி வெடிகளை வீசும் கப்பல் மற்றும் ஏராளமான படகுகள் அழிக்கப்பட்டன. இதில் ஈரான் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஜோர்டானில் உள்ள இரு அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் ராணுவம் திங்கட்கிழமை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் வடக்குப் பகுதியில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஜோர்டானின் கிங் ஹுசைன், அல் – அஸ்ராக் விமானப்படைத் தளங்கள் நோக்கி சீறிப் பாய்ந்தன. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் அழிக்கப்பட்டன. சில ஏவுகணைகள் ஜோர்டான் விமானப் படைத் தளங்களில் விழுந்து வெடித்தன.
உலகின் மிக முக்கிய கச்சா எண்ணெய் வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வரைபடத்தில், ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் ஒருங்கிணைந்த பகுதியாக சித்தரிக்கப்பட்டு இருந்தது.
ஈரானும் ஓமனும் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையில் முக்கிய உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் இரு நாடுகளும் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்லும் ஈரானின் லாரக் தீவை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பலைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானின் பல்வேறு மாகாணங்களின் மீது புதன்கிழமை (செப்டம்பர் 2) அதிகாலை வரை அமெரிக்க படைகள் தாக்குதல்கள் நடத்தின.
இதில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் உள்ள ஹோர்மோசன் மாகாணத்தில் உள்ள சிரிக் நகரத்தில் திருமண நிகழ்ச்சி கொண்டாட்டங்கள் நடைபெற்ற ஒரு வீட்டின் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் இந்தப் புதிய தாக்குதலில், கோஹெஸ்தாக்கில் 4 பேரும், குஸிஸ்தான் மாகாணத்தில் 7 பேரும், கெர்மன்ஷாவில் ஈரானின் புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த 4 வீரர்களும், லாவன் தீவில் பசிஜ் பிரிவு வீரர்கள் 3 பேரும், ஃபார்ஸ் மாகாணத்தில் ஒருவரும் என மொத்தம் 19 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்தே நடத்தப்பட்டது என அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால், அமெரிக்கா செய்திருப்பது போர்க்குற்றம் எனவும், இதுகுறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



