ஈரானின் மேற்கு மாகாணமான லோரெஸ்தானில் (Lorestan) இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இரகசியமாகப் புகைப்படம் எடுத்த 35 பேரை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் முக்கியமான இராணுவத் தளங்கள் மற்றும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் பகுதிகளைச் சட்டவிரோதமாகப் படம்பிடித்து ஈரானுக்கு எதிரான எதிரி நாட்டு ஊடகங்களுக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
அதிரடி நடவடிக்கை
மீதமுள்ள 19 பேர், சமூக வலைதளங்கள் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றம் ஐந்தாவது வாரமாக நீடித்து வரும் நிலையில் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பைக் குலைக்க முற்படும் ஒற்றர்கள் மற்றும் கூலிப்படையினரை ஒடுக்க இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் மட்டும் நாடு முழுவதும் இத்தகைய குற்றச்சாட்டுகளின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது அந்நாட்டில் நிலவும் உச்சக்கட்ட பாதுகாப்பு கெடுபிடிகளைப் பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
