ஈரானிய கப்பலான ‘ஐரிஸ் புஷேர்’ திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஊடகங்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, கப்பலின் 208 பணியாளர்களை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையின் பிரதேசம், கடல் பகுதிகள் மற்றும் வான்வெளியை எந்தவொரு நாடும் விரோதமான முறையில் அல்லது மற்றொரு நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதலிடத்தில் மனிதநேயம்
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அநுர, “எந்தவொரு சர்வதேச மோதலிலும் எங்கள் நடுநிலைமை, எங்கள் பிரதேசம், எங்கள் கடல் பரப்புகள், எங்கள் வான்வெளி ஆகியவற்றை மோதலில் எந்தவொரு நாட்டிற்கும் சார்புடையதாகவோ அல்லது எந்த நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் விதமாகவோ பயன்படுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

அதுதான் எங்கள் நிலைப்பாடு. எனவே, மோதல் தொடங்கிய நேரத்தில் நாங்கள் எடுத்த நடவடிக்கைகள், நாங்கள் வெளியிட்ட அறிக்கைகள், இவை அனைத்தும் இந்த நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. அதன்படி, இரண்டு ஈரானிய கப்பல்கள் பற்றிய பிரச்சினை எழுந்துள்ளது, நாங்கள் அங்கும் நடுநிலையைப் பின்பற்றுகிறோம்.
மேலும், ஒரு தேசமாகவும் ஒரு நாடாகவும், நடுநிலையைப் பேணுகையில், எங்களுக்கு மனிதநேயம் முதலிடத்தில் உள்ளது. எனவே, நாங்கள் சிறிதும் தயங்க மாட்டோம்.
மனிதகுலத்தைப் பாதுகாக்க, மனித உயிர்களைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இருந்தால், அந்த நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்க மாட்டோம். அதுதான் ஒரு நாடு எடுக்க வேண்டிய சிறந்த கொள்கை என்று நான் நினைக்கிறேன். அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம்.”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

