Last Updated:
அமெரிக்கா தனது வலிமை வாய்ந்த போர் தளவாடங்ளை குவித்து வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது வலிமை வாய்ந்த போர் தளவாடங்ளை குவித்து வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் பேச்சுவார்த்தை மற்றொரு புறம் ஆயுதங்கள் குவிப்பு என அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.
ஈரான் – அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முறையில் நடைபெற்றதாக அமெரிக்காவும் ஈரானும் தெரிவித்தன. ஆனாலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது படைகளை குவித்து வருகிறது அமெரிக்கா. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் F-35 Lightning II, F-22 Raptor மற்றும் F-16 Fighting Falcon உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நவீன போர் விமானங்களை அமெரிக்கா, ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள ராணுவ தளங்களுக்கு அனுப்பியுள்ளது. இவை உலகின் மிகவும் சக்திவாய்ந்த ‘ஸ்டெல்த்’ (Stealth) ரக விமானங்களாகும்.
அரேபிய கடலில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) கப்பலுடன், தற்போது உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு (USS Gerald R. Ford) மற்றும் அதன் துணை போர்க்கப்பல்களும் மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கி விரைந்துள்ளன. வான்வெளியிலேயே போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் வசதிகளையும் அமெரிக்கா தயார் நிலையில் வைத்துள்ளது.
ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் இரண்டு வாரங்களுக்குள் ஒரு தெளிவான உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒருபுறம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், மறுபுறம் அமெரிக்கா தனது ராணுவத்தை குவித்து வருவது ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் தந்திரமாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை தற்காலிகமாக மூடிவிட்டு, அங்கு ஏவுகணை சோதனைகள் மற்றும் போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது. ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிடாத பட்சத்தில், அதன் முக்கிய அணுசக்தி தளங்கள் மீது ஒரு நேரடித் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பெரிய போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஈரானின் முக்கிய இடத்தை டார்க்கெட் செய்யும் அமெரிக்கா.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்!


