Last Updated:
Israel-Iran Conflict | இஸ்ரேல், ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளிடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேல் நகரங்களில் ஏவுகணை தாக்குதலால் 17 பேர் உயிரிழந்தனர்.
ஈரானில் ராணுவ கட்டுப்பாட்டு மையம் மற்றும் அணு உலை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நில அதிர்வு உணரப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது.
அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி, அந்நாட்டின் அணு உலைகள் மீது இஸ்ரேல் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் நகரங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில், பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் வழிமறித்து அழிக்கப்பட்டன. எனினும், ஒரு சில ஏவுகணைகள் இஸ்ரேல் மீது விழுந்து வெடித்துச் சிதறின. இதனால், இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலம், பாட் யாம் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான கட்டடங்கள் உருக்குலைந்தன.
இரு நாடுகளிடையே 4 ஆவது நாளாக மோதல் நீடித்து வரும் நிலையில், நேற்றிரவு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் லேசாக சேதமடைந்தது. இதையடுத்து, தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தலைநகரில் கடும் புகை மூட்டம் சூழ்ந்து காட்சியளித்தது. இதேபோன்று, ஈரானின் குவாம் நகர் அருகே உள்ள போர்டோவ் அணு உலை மீது இஸ்ரேல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக, அந்தப் பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அலறியடித்து ஓடினர்.
ஈரான் ராணுவத்தின் குவாட் படைப்பிரிவின் கட்டுப்பாட்டு மையத்தைத் தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
June 16, 2025 12:11 PM IST
Israel-Iran Conflict | ஈரானின் அணுசக்தி மையம் அருகே தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… நில அதிர்வு பதிவானதால் மக்கள் அச்சம்!


