ஈராக்கில் ஆண்களின் திருமண வயது வரம்பை 15 ஆகவும் பெண்களின் திருமண வயது வரம்பை 9 ஆகவும் குறைக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டன குரல் வலுத்து வருகிறது.
மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் ஒன்று ஈராக். போர் சூழல், தீவிரவாத அச்சுறுத்தல்கள் ஒரு பக்கம் என்றால் மற்றொரு புறம் கட்டாய ஹிஜாப் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
நடிகையாகவே இன்ஸ்டாகிராம் பிரபலமாகவோ இருந்தால் படுகொலை, பெண்ணுரிமை பேசினால் சிறையில் அடைப்பு என பெண்களுக்கு எதிரான கொடுமைகளாலும் தலைப்பு செய்திகளில் இடம் பெறுவது வாடிக்கையாகிவிட்டது.
ஆனால், இவற்றையெல்லாம் ஓரம் கட்டும் அளவிற்கு ஈராக் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தம் பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. கடுமையான போராட்டத்துக்கு பிறகு 1959 ஆம் ஆண்டு ஆண் மற்றும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை 9 ஆகக் குறைக்க ஈராக் சட்டத்துறை அமைச்சகம் மசோதா ஒன்றை தற்போது முன்மொழிந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆண்களுக்கான திருமண வயதை 15 ஆக குறைக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கும்.
இது குழந்தைத் திருமணம் மற்றும் பெண்கள் மீதான சுரண்டலை அதிகரிக்கும் என்றும் பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்திற்காக நடந்த பல தலைமுறை போராட்டத்தை இந்த சட்டம் சீர்குலைக்கும் என்றும் மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளன.
இதையும் படிக்க:
முதுநிலை நீட் தேர்வை ஒத்தி வைக்க முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !
இளம் பெண்களின் கல்வி, உடல்நிலை மற்றும் நல்வாழ்வைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் பதின்ம வயது கர்ப்பம், குடும்ப வன்முறை, கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே ஈராக்கில் 28 சதவீத பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடப்பதாக யுனிசெப் அமைப்பு கூறுகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது ஈராக்கை பல தசாப்தங்கள் பின்னோக்கி நகர்த்தும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு ஆராய்ச்சியாளர் சாரா சன்பார் அச்சம் தெரிவித்துள்ளார்.
மேலும், குடும்ப விவகாரங்களில் நீதித்துறையே இதுவரை முடிவு எடுத்து வந்த நிலையில், இனி மத போதகர்களும் கூட முடிவெடுக்கலாம் என சட்டத் திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத போதகர்களுக்கு இதுபோல அதிகாரத்தைக் கொடுப்பது வாரிசு உரிமை, விவாகரத்து, குழந்தைப் பாதுகாப்பு விஷயங்களில் பெண்களின் உரிமைகளை மேலும் பறிக்கும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
கடந்த ஜூலை மாதமே இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த சட்ட மசோதா திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் அதே மசோதாவை அரசு முன்மொழிந்துள்ளது. இந்த முறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக ஷியாக்கள் உள்ளதால், சட்டமாக நிறைவேறும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)