ஈப்போ,
வரும் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஈப்போ தைப்பூச விழா மாநில அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புடன் நடைபெறும் என்று மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா ஏற்பாட்டில் இவ்விழா நடைபெற்றாலும் இவ்விழா சிறப்புடன் நடைபெற பல அரச இலாகாக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.இவ்விழாவை முன்னிட்டு தற்காலிகக் கூடாரங்கள் அமைக்க பொது மக்கள், அரசு சாரா இயக்கங்கள் மாநகர் மன்றத்தின் அனுமதியை அவசியம் பெறவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


மது பானங்கள் விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது, அதனை மீறுவோர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலையும் சிவநேசன் நேற்று மாநில அரசாங்க செயலகத்தில் தைப்பூச விழாவை முன்னிட்டு அரசாங்க இலாகாக்களின் அதிகாரிகள், ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பிற்குப் பின்னர் இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.பேராக் மாநிலத்தில் உள்ள கல்லுமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கோலாகலமாக தைப்பூச விழா நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் ஈப்போ தேவஸ்தானம் சிறப்பான முறையில் செய்துள்ளது. சுமார் லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு 50 ஆயிரம் பேர் பால் குடம் சுமந்து காணிக்கை செலுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படு கிறது. இந்த ஆண்டும் சிறப்பான முறையில் இவ்விழா நடைபெற பொது மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்று குறிப்பிட்டார்.


