Last Updated:
மகாராஷ்டிரா அரசு 2014 இஸ்லாமியர்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்துள்ளது, இனிமேல் புதிய சேர்க்கை அல்லது வேலைவாய்ப்பு வழங்கப்படாது.
மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் அறிவிக்கப்பட்ட 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 2014-ஆம் ஆண்டு இஸ்லாமியர்களை சிறப்பு பிற்படுத்தப்பட்ட வகுப்பு-ஏ என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து, அவர்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கி அப்போதைய காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கத் தடை விதித்தது. ஆனால், கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கலாம் என அனுமதி அளித்தது.
மற்றொருபுறம் 2014 டிசம்பரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக மாற்றப்படவில்லை. இதனால் அந்த அவசரச் சட்டம் தானாகவே காலாவதியானது. கடந்த 11 ஆண்டுகளாக இந்த இடஒதுக்கீடு நடைமுறையில் இல்லை என்றாலும், அது தொடர்பான பழைய அரசாணைகள் ரத்து செய்யப்படாமல் இருந்தன.
இந்நிலையில், மகாராஷ்டிர அரசின் சமூக நீதித்துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணையில், 2014-ல் வெளியிடப்பட்ட இடஒதுக்கீடு தொடர்பான அனைத்து உத்தரவுகளும் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல், இந்த இடஒதுக்கீட்டின் கீழ் எந்தப் புதிய சேர்க்கையோ அல்லது வேலைவாய்ப்போ வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விவாதப் பொருளாகி உள்ள நிலையில், இது ஒரு நிர்வாக ரீதியான நடைமுறை மட்டுமே என்று மகாராஷ்டிரா அரசு விளக்கமளித்துள்ளது.
இஸ்லாமியர்களுக்கு கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு ரத்து – அரசாணை வெளியிட்ட மகாராஷ்டிரா அரசு


