Last Updated:
ISRO | இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..
விண்வெளியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, தனது 100வது ராக்கெட்டை ஏவியது.
1975-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான “ஆர்யபட்டா” சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது. அதன்பிறகு, எஸ்.எல்.வி (SLV), ஏ.எஸ்.எல்.வி (ASLV), பி.எஸ்.எல்.வி. (PSLV), ஜி.எஸ்.எல்.வி. (GSLV), எல்.வி.எம்.-3 (LMV-3), எஸ்.எஸ்.எல்.வி. (SSLV) என இந்தியாவின் பல்வேறு கனவுத்திட்டங்களை சுமந்து கொண்டு இந்த ராக்கெட்கள் விண்ணில் சீறிப்பாய்ந்தன. குறிப்பாக, நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்கள், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் மங்கள்யான், சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 உள்ளிட்ட விண்கலன்கள் உலகின் பார்வையை இஸ்ரோ பக்கம் திருப்பின.
இந்நிலையில், 100-ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எஃப்-15 மூலம், என்விஎஸ்-2 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது. 2250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும். எல் 1, எல் 5, எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணு கடிகாரம் உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சரியாக காலை 6.23 மணிக்கு, இஸ்ரோவின் 100 ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி.எஃப்-15 மூலம் இத்தகைய சிறப்பு வாய்ந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
நாட்டின் விண்வெளித்துறையில் முக்கிய மைல்கல்லாக 100 ஆவது ராக்கெட் விண்ணில் பாய்ந்துள்ளது. இதை ஏராளமான மாணவ, மாணவிகள், சிறப்பு அழைப்பாளர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.
இஸ்ரோ தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணன் பொறுப்பேற்ற பிறகு விண்ணில் பாய்ந்த முதல் ராக்கெட் இதுவாகும். இதன்மூலம் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள என்விஎஸ்-02 என்ற செயற்கைக்கோள், மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்க உள்ளது. பேரிடா் காலங்களில் துல்லியத் தகவல்களை வழங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 29, 2025 6:25 AM IST


