Last Updated:
மக்கள் தங்களின் சேமிப்பை ரியாலில் இருந்து தங்கமாக மாற்றத் தொடங்கினர், இது ரியாலின் மதிப்பை மேலும் குறைத்தது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், ஈரான் நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானிய ரியாலின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 13 லட்சமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, இஸ்ரேலிய நாணயமான ஷெக்கல் (Shekel), போர்ச் சூழலிலும் 3.14 என்ற நிலையில் உறுதியாக நீடிக்கிறது. ஒரு இஸ்ரேலிய ஷெக்கல் மூலம் சுமார் 4,21,000 ஈரானிய ரியால்களை வாங்க முடியும் என்பது ஈரானின் பணமதிப்பு எந்தளவுக்குச் சிதைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
இஸ்ரேல் ஒரு உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு மையமாகத் திகழ்வதால், அந்நாட்டிற்குத் தொடர்ந்து அந்நிய முதலீடுகள் வந்தவண்ணம் உள்ளன. மேலும், இஸ்ரேலிடம் உள்ள 212 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு, பொருளாதார நெருக்கடிகளின் போது ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறது.
ஆனால், ஈரான் பல தசாப்தங்களாகச் சர்வதேசப் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருகிறது. நேற்று தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல்கள், அந்நாட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, மக்கள் தங்களின் சேமிப்பை ரியாலில் இருந்து தங்கமாக மாற்றத் தொடங்கினர், இது ரியாலின் மதிப்பை மேலும் குறைத்தது.
தற்போது ஈரானில் பணவீக்கம் 48%-க்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலால் இந்தியப் பொருளாதாரம் பெரும் சவால்களைச் சந்திக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. வளைகுடா நாடுகளில் சுமார் 90 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அங்கு நிலவும் நிலையற்ற தன்மை அவர்களின் சேமிப்பையும் இந்தியாவிற்கு வரும் அந்நியப் பண வரத்தையும் பாதிக்கும்.
முக்கியமாக, உலக எண்ணெய் விநியோகத்தில் 20% கடந்து செல்லும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ பகுதியில் போர் தீவிரமடைந்தால், கச்சா எண்ணெய் விலை 40% வரை உயர வாய்ப்புள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பை அமெரிக்க டாலருக்கு எதிராக 91-க்கும் கீழே கொண்டு செல்லக்கூடும். எண்ணெய் இறக்குமதிச் செலவு அதிகரிப்பது இந்தியாவில் விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் தாக்குதலால் நிலை குலைந்த ஈரானின் பொருளாதாரம்.. இந்தியாவில் பாதிப்புகள் ஏற்படுமா?


