Last Updated:
போக்குவரத்துத் தடையால் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் 3.5 கோடி முட்டைகள் கடந்த 12 நாட்களாக நடுக்கடலில் சிக்கியுள்ளன. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் முட்டை உற்பத்தியின் தலைநகரமாக திகழும் நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு நாளொன்றுக்குச் சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 70 லட்சம் முட்டைகள் சவுதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், சில ஆப்பிரிக்க நாடுகளுக்கும் தினசரி ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதன் விளைவாக கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, 77 குளிரூட்டப்பட்ட (AC) கண்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்ட 3.50 கோடி முட்டைகள், அரபு நாடுகளைச் சென்றடைய முடியாமல் கடந்த 12 நாட்களாக நடுக்கடலிலேயே முடங்கியுள்ளன. ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள் அச்சிடப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட காலத்திற்குள் அவை சந்தையைச் சென்றடைய வேண்டியது அவசியமாகும். தாமதம் நீடிக்கும் பட்சத்தில், முட்டைகளின் தரம் பாதிக்கப்பட்டு அவை நிராகரிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இதுகுறித்து நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர் டாக்டர் செந்தில் கூறுகையில், ” போக்குவரத்துத் தடையால் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மத்திய வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), சம்பந்தப்பட்ட நாடுகளின் அதிகாரிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நடுக்கடலில் தத்தளிக்கும் முட்டைகளை உரிய நாடுகளுக்குக் கொண்டு சேர்க்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்


