லண்டனில் செயல்பட்டுவரும் இந்து மதத்தைச் சேர்ந்த இஸ்கான் சைவ உணவகத்தில் இளைஞர் ஒருவர், இறைச்சி உண்ணும் விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இஸ்கான் என்னும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணரின் உபதேசங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும், இந்து மத அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. பல தன்னார்வலர்கள் இதில் பணிபுரிந்து வருகின்றனர்.
லண்டனில் இஸ்கான் அமைப்புக்குச் சொந்தமான சைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், கடையில் இருந்தவர்களிடன் ‘இது சைவ உணவகமா?’ எனக் கேட்கிறார்.
கடையில் இருந்தவர்கள் ‘ஆம்’ என பதில் அளித்ததும், கையில் வைத்திருந்த கோழி இறைச்சி உணவை எடுத்து அவர்கள் முன்பு உண்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் அவரை வெளியேறுமாறு கூறுகின்றனர்.
வாடிக்கையாளர்கள் சிலர், ‘இது கோயிலுக்குச் சொந்தமான உணவகம்’ என்றும், ‘இறைச்சி, பூண்டு போன்றவற்றுக்கு அனுமதியில்லை’ என வெளியே பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

