அவிசாவளை எலிஸ்டன் தோட்ட இளைஞர் ஒருவர், தோட்ட கள உத்தியோகஸ்தர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சரின் பிரதிநிதிகள் கவனம் செலுத்தி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட் கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் வேண்டுக் கோளுக்கிணங்க சனிக்கிழமை (31) அன்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரிய ஆராச்சி, தலைமையில் சீதாவக்கை பிரதேச சபை உறுப்பினர் சேரலி வீரசிங்க, பிரேமாநாத் ஜயரத்ன, பாலித்த பாலசூரிய, விஜயகுமார் கமல் (ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் சம்பவம் இடம் பெற்ற தோட்டத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட இளைஞனுடன் மற்றும் அவருடைய பெற்றோர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பாக தோட்ட முகாமைத்துவம், அவிசாவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய நிலையில் இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாத வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் மனித உரிமை ஆணைக்குழு, அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கின்ற சமூக அமைப்புகள் போன்றவற்றுடன் கலந்துரையாடி அதற்கான உரிய தீர்வு எட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவுதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் , தொடர்ந்து முன் தினங்களில் பெய்த கன மழை கடும் காற்று காரணமாக அவிசாவளை தோட்ட குடியிருப்புகள் பெரும் சேதத்திற்குள்ளாகியதுடன் அவற்றையும் பார்வையிட்ட குழுவினர், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எஸ் சதீஷ்



