Last Updated:
ரிசர்வ் வங்கி தனது ஜூன் மாத பணவியல் கொள்கை கூட்டத்தில், 2026-27 நிதியாண்டிற்கான (FY27) பணவீக்கக் கணிப்பை 4.6 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
பகிர்ந்துள்ள பொருளாதாரச் செய்திக்குறிப்பு, மேற்கு ஆசியாவில் (வளைகுடாப் பகுதியில்) நடக்கும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் (Retail Inflation) ரிசர்வ் வங்கியின் (RBI) இலக்குக்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை அதிகரிக்காது என்பதால் இல்லத் தரசிகளுக்கு இது இனிப்பான செய்தி என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையிலும், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால இலக்கான 4 சதவீதத்திற்கும் குறைவாகவே நீடிக்கிறது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தற்காலிகத் தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.93 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் பதிவான 3.48 சதவீதத்தை விட சற்றே அதிகமாக இருந்தாலும், ரிசர்வ் வங்கியின் 4 சதவீத வரம்பிற்குள் இருப்பது பொதுமக்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) கூடையின் அடிப்படை ஆண்டு 2024 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், இந்தத் தரவை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் நேரடியாக ஒப்பிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 2023-24 ஆம் ஆண்டின் வீட்டு நுகர்வுச் செலவு கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்த புதிய மாற்றியமைக்கப்பட்ட தொடர் கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி பணவீக்கம் கட்டுக்குள் இருந்தாலும், எல் நினோ (El Nino) தாக்கத்தால் பருவமழை குறைவதற்கான வாய்ப்புகள் மற்றும் வளைகுடாப் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயருவது போன்ற காரணங்களால், வரும் நாட்களில் பணவீக்க அழுத்தம் அதிகரிக்கலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி தனது ஜூன் மாத பணவியல் கொள்கை கூட்டத்தில், 2026-27 நிதியாண்டிற்கான (FY27) பணவீக்கக் கணிப்பை 4.6 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இருப்பினும், ஜூன் 5ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு (MPC) ஒருமனதாக முடிவெடுத்து, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாகவே மாற்றமில்லாமல் நீடித்தது. இது உலகளாவிய நிச்சயமற்ற சூழலில் ரிசர்வ் வங்கி கையாண்டு வரும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் காட்டுவதகாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. உலகமே பதறினாலும் இந்தியாவுக்கு நிம்மதி! என்ன விபரம் தெரியுமா?


