Last Updated:
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த முதியோர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. களுத்துறை மாவட்டம் ஹொரண – அங்குருவாதொட்ட என்ற இடத்தில் தனியார் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வந்தது.
இதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள் என சுமார் 72 பேர் வசித்து வந்தனர். இந்த நிலையில், முதியோர் இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயில் இருந்து வெளியேற முடியாமல் அங்கிருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் தீயில் கருகி 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இலங்கை தீ விபத்து

50 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இது தவிர்த்து 2 பேரை காணவில்லை என முதியோர் இல்லம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து நடந்த விசாரணையில், உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக முதியோர் இல்லம் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


