இலங்கை அப்பர் மிடில் கிளாஸ்.. இந்தியா லோவர் மிடில் கிளாஸ்.. உலக வங்கி சொன்ன முக்கிய விஷயம்!
இலங்கை, இந்தியாவின் தெற்கு பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. 2022ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல நெருக்கடி பிரச்சனை அந்நாட்டின் நிதி நிலை, வர்த்தக சந்தை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது யாரும் மறக்க முடியாது. ஆனால் அடுத்த 4 வருடத்தில் இலங்கை அப்பர் மிடில் கிளாஸ் நாடாக உயர்ந்துள்ளது என உலக வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மட்டுமா கடந்த 4 ஆண்டுகளில் வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் மிகப்பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி கண்டதால் அப்பர் மிடில் கிளாஸ் நாடாக உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியா தொடர்ந்து லோவர் மிடில் கிளாஸ் நாடாகவே உள்ளது. 2007ஆம் ஆண்டு முதல் இந்தியா லோவர் மிடில் கிளாஸ் நாடாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாடு அப்பர் மிடில் கிளாஸ், லோவர் மிடில் கிளாஸ் நாடு என்பதை வகைப்படுத்த முக்கிய அடிப்படையாக இருப்பது அந்நாட்டின் தனி நபர் வருமானம் தான், இதனால் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பதை காட்டிலும் அந்நாட்டின் வருமானம் மக்கள் மத்தியில் எப்படி பகிரப்படுகிறது என்பதை பொறுத்து அமைகிறது.
மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளில் சிறிய அளவில் பொருளாதாரம் வளர்ச்சி கண்டாலும் தனி நபர் வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், இதன் வாயிலாகவே இலங்கை, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தரம் உயர்ந்துள்ளது.
இலங்கையின் தனிநபர் வருமானம் 4,670 டாலராக உள்ளது, வியட்நாம் நாட்டில் 4,970 டாலராக உள்ளது, பிலிப்பன்ஸ் நாட்டில் 4,850 டாலராக ஆக உள்ளது. இந்தியாவின் தனி நபர் வருமானம் 2,760 டாலராக உள்ளது.
உலக வங்கியின் தனிநபர் வருமான அளவுகோள் படி 1,136 முதல் 4,495 டாலர் வரையில் இருக்கும் நாடுகள் லோவர் மிடில் கிளாஸ், 4,496 முதல் 13,935 டாலர் வரையில் இருக்கும் நாடுகள் அப்பர் மிடில் கிளாஸ்.
இதில் இலங்கையின் வளர்ச்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது, இலங்கை திவாலாகி விடும் என்ற அச்ச நிலையில் இருந்து 2025ஆம் ஆண்டில் அந்நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுலா துறை மிகவும் முக்கியமான பலமாக இருந்தாலும் இத்துறை வர்த்தகத்தை மேம்படுத்த இலங்கையின் புதிய அரசு எடுத்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது. இதன் வாயிலாக நிதி நிலை மேம்பட்டது, இதோடு இலங்கையின் தொழிற்துறையும் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளின் முதலீட்டின் காரணமாக வளர்ச்சி பாதையை நோக்கி நகர துவங்கியுள்ளது.
இலங்கை முதல் முறையாக 2019ல் அப்பர் மிடில் கிளாஸ் என்ற அந்தஸ்தை பெற்றது, அதன் பின்பு பொருளாதார பாதிப்பு காரணமாக தற்போது மீண்டும் அந்த இடத்தை தொட்டு உள்ளது. 2022 பொருளாதார நெருக்கடிக்கு பின்பு IMF உடன் இணைந்து இலங்கை அரசு நிர்வாகத்தை மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் இயக்கியது மூலம் பெரிய அளவிலான மாற்றத்தை பார்த்தது, இதை சுற்றுலா துறை வர்த்தகத்தின் மீட்சி பெரிய அளவில் உதவியுள்ளது.
