இலங்கையில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்டங்களை முறையாக அமல்படுத்துவதையும், அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் இச்சேவைகளை வழங்குவதைத் தடுப்பதையுமே, இந்த அதிரடி நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கையில் முறையான உரிமம் இன்றி இயங்கி வரும் 146 இணைய சூதாட்டத் தளங்களை உடனடியாக முடக்குமாறு, அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) பணிப்புரை விடுத்துள்ளது.
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், இலங்கையிலுள்ள பயனர்கள் இந்தத் தளங்களை அணுகுவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக TRCSL பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல்படும் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு இணங்க, 2025ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செல்லுபடியாகும் உரிமம் இன்றி இணைய சூதாட்ட சேவைகளை நடத்துவது அல்லது அதனை ஊக்குவிப்பது இச்சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
இச்சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆகிய பிரிவுகளின் கீழ் இது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுவதுடன், 44ஆவது பிரிவின் கீழ் இதற்கான தண்டனைகள் வழங்கப்படும் என சூதாட்ட ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்டங்களை முறையாக அமல்படுத்துவதையும், அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் இச்சேவைகளை வழங்குவதைத் தடுப்பதையுமே, இந்த அதிரடி நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

