இலங்கையில் பொதுத்தேர்தல் நாளை நடைபெறுகின்றது. இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலானது விகிதாசாரப் பிரதிநிதித்துவ(PR System )முறையில் நடைபெறுகின்றது. அதாவது தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெறுகின்ற வாக்குவீதத்திற்கு ஏற்ப ஆசனங்களை, கணித உத்திகளை பயன்படுத்தி பிரித்து வழங்குகின்ற முறையாகும். இதனடிப்படையில் இலங்கை பாராளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்கள் தேர்தல் மூலமும், 29 உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் முறை மூலமும் தெரிவு செய்யப்படுகின்றனர்.
மாவட்ட( Electoral district) அடிப்படையிலேயே தேர்தல் நடைபெறுகின்றது. இலங்கையில் மொத்தமாக 25 நிருவாக மாவட்டங்கள் உள்ள போதிலும், அரசியல் யாப்பின் 96 ஆவது உறுப்புரைக்கு அமைய 22 தேர்தல் மாவட்டங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அதாவது 25 நிருவாக மாவட்டங்களில் யாழ் நிருவாக மாவட்டமும், கிளிநொச்சி நிருவாக மாவட்டமும் இணைக்கப்பட்டு யாழ் தேர்தல் மாவட்டமாகவும் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நிருவாக மாவட்டங்கள் இணைக்கப்பட்டு வன்னி தேர்தல் மாவட்டமாகவும் கணிக்கப்பட்டு அம்பாறை நிருவாக மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் மாவட்டமாக அழைக்கப்பட்டு 22 தேர்தல் மாவட்டங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளது. 196 ஆசனங்கள் 22 தேர்தல் மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் 160 ஆசனங்கள் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தொகைகளின் அடிப்படையிலும் மிகுதி 36 ஆசனங்களும் மாகாண பரப்பளவு அடிப்படையில் அதாவது 1 மாகாணத்திற்கு 4 ஆசனங்கள் என்ற அடிப்படையில் (9 x 4 = 36) பகிர்ந்தளிக்கப்படுகின்றன. வாக்காளர்களின் தொகையின் அடிப்படையில் 160 ஆசனங்களைப் பகிர்ந்தளிக்கின்றபோது, 22 தேர்தல் மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர் தொகையினை 160 என்ற எண்ணிக்கையால் வகுக்கின்றபோது வருவது தகைமை பெறும் தொகையாகும். இத்தகைமை பெறும் தொகையினைக் கொண்டு ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் தொகையை தனித்தனியே பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரிக்கப்பட்ட தொகையே மாவட்டங்களுக்கான சனத்தொகை அடிப்படையிலான ஆசனங்களாக இருக்கும்.
இருப்பினும் 160 ஆசனங்களும் முழுமையாக பகிர்ந்தளிக்கப்படாது எஞ்சியிருக்கும் ஆசனங்கள் தேர்தல் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட மிகுதி வாக்காளர் தொகையில் கூடுதலான தொகையினைக் கொண்ட மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படும். இவ்வாறு பெறப்படும் சனத்தொகை அடிப்படையிலான ஆசனங்களும், மாகாண பரப்பளவு அடிப்படையில் பெறப்படும் ஆசனங்களும் கூட்டப்பட்டு ஒரு தேர்தல் மாவட்டத்துக்கான இறுதி ஆசன ஒதுக்கீடாக அமையும்.
விகிதாசாரப் பட்டியல் முறையின் கீழ் வாக்காளர் ஒருவர் தமது வாக்குகளை அளிக்கும்போது முதலில் தான் விரும்பும் கட்சிக்கு அல்லது சுயேச்சைக் குழுவுக்கு வாக்களிக்க வேண்டும். இந்த அடிப்படை வாக்கு கட்டாயமானதாகும். அத்தோடு அப்பட்டியலில் தான் விரும்பும் 3 வேட்பாளர்களுக்கு விருப்புவாக்கு அளிக்கலாம்.
மேலும் அப்பட்டியலில் தான் விருப்புவாக்கினைப் பயன்படுத்துகின்றபோது, இலக்கங்களுக்கு மேலே புள்ளடியிட்டுக் காட்ட வேண்டும். 3 விருப்பு வாக்குகளும் வாக்குச்சீட்டில் அளிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை. விரும்பினால் ஒரு இலக்கத்துக்கு மட்டும் அல்லது இரு இலக்கங்களுக்கு மட்டும் அல்லது மூன்று இலக்கங்களுக்கும் புள்ளடியிட்டுக் காட்டலாம். அல்லது எந்தவொரு இலக்கத்துக்கும் புள்ளடியிடாது விடலாம். ஆனால் தான் விரும்பும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் சின்னத்துக்கு நேரே புள்ளடியிட்டுக் காட்டுவது கட்டாயமாகும்.
கட்சியின் அல்லது சுேயச்சைக் குழுவின் சின்னத்துக்கு நேரே புள்ளடியிட்டுக் காட்டாது விருப்புவாக்குகளுக்கு மட்டும் புள்ளடியிடப்படின் அவ்வாக்குகள் நிராகரிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட கட்சியின் அல்லது சுயேச்சைக் குழுவின் நேரே புள்ளடியிடப்பட்டிருப்பின், அவ்வாக்கும் நிராகரிக்கப்படும். கட்சிக்கு அல்லது சுயேச்சைக் குழுவுக்கு இடும் வாக்கானது கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெறுகின்ற ஆசனத்தைத் தீர்மானிக்கும்.
விருப்பு வாக்குகள் இவற்றின் மூலம் பெறப்பட்ட ஆசனத்துக்கான பிரதிநிதி யார் என்பதைத் தீர்மானிக்கும்.
வாக்குக் கணிப்பீடானது பல்வேறு கணித உத்திகளின் பிரயோகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும். வாக்கு கணிப்பீடு தேர்தல் மாவட்ட ரீதியாக தனித்தனியாக இடம் பெறும். அப்போது முதலில் இரு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.
அத்தேர்தல் மாவட்டத்தில் கூடிய வாக்குகள் பெற்ற கட்சி அல்லது சுயேச்சைக்குழு மாவட்டத்தில் குறைந்த வாக்குகள் பெற்ற கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள், (5% குறைந்த) எவை என அறியப்படும். இதன்படி கூடிய வாக்குகள் பெற்ற கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு ஒரு சன்மான/போனஸ் ஆசனம் வழங்கப்படும்.
குறைந்த வாக்குகள் பெற்ற கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் அதாவது, அம்மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 5% இற்கு குறைந்த வாக்குகள் (வெட்டுப்புள்ளி) பெற்ற கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் அத்தேர்தல் மாவட்டத்தில் எந்தவொரு ஆசனத்தையும் பெற முடியாது என்பதுடன், போட்டியில் இருந்து நீக்கப்படும்.
அப்போது போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்களது வாக்குகள் அம்மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளிலிருந்து கழிக்கப்படும். அவ்வாறு கழிக்கப்பட்டு வரும் மிகுதியான தொகை தொடர்புடைய வாக்குகள்/ இசைவான வாக்குகள் என அழைக்கப்படும்.
இத்தொடர்புடைய வாக்குகளை அம்மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஆசன எண்ணிக்கையிலிருந்து ஒன்றினை கழித்து வரும் எண்ணிக்கையினால் பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரிக்கப்பட்டு வரும் தொகை விளைதொகை/ முடிவெண்/தகுதிகாண் வாக்கு எனப்படும். விளைதொகையினைக் கொண்டு தனித்தனியே ஒவ்வொரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளை பிரிக்க வேண்டும் (5% குறைந்த வாக்குகளைப் பெற்ற பட்டியல்கள் தவிர) இவ்வாறு பிரிப்பதால் வரும் எண்ணிக்கை பட்டியலுக்கான ஆசனங்களாகும். இந்நிலையில் குறித்த ஆசனங்களில் ஏதேனும் ஆசனங்கள் வழங்கப்படாது எஞ்சியிருக்குமானால், அவை பட்டியல்களின் பெரும்பான்மை மிகுதி வாக்குகளின் முன்னுரிமை அடிப்படையில் அவ்வாசனம் வழங்கப்படும். ஒவ்வொரு கட்சி/சுயேச்சைக் குழுக்கள் வெற்றி பெற்ற ஆசனங்கள் கணிப்பிடப்பட்ட பின்னர் அவ்வாசனத்துக்குரிய பிரதிநிதி யார்? என்பது விருப்பு வாக்குகளின் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இங்கு இடைத்தேர்தல்கள் நடைபெறாது ஒரு வெற்றிடம் ஏற்படுமாயின், அடுத்த முன்னுரிமை அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவர்.
தேசியப் பட்டியல் ஆசன ஒதுக்கீடு:
தேசியப் பட்டியல் முறை என்பது பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்ததும் தேசிய ரீதியாக கட்சி அல்லது சுயேச்சைக்குழு பெறுகின்ற வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கான ஆசனங்களை ஒதுக்கீடு செய்கின்ற முறையாகும். 29 உறுப்பினர்களை பாராளுமன்றத்தில் மேலதிகமாக சேர்த்துக் கொள்ளும் ஓர் வழிமுறையாக இது அமைந்துள்ளது. அதாவது இலங்கை முழுவதும் அளிக்கப்பட்ட கட்சிகள் பெற்ற மொத்த செல்லுபடியான வாக்குகள் கவனத்தில் கொள்ளப்படும். இதனை தேசிய ரீதியாக பெற்ற மொத்த வாக்கு எனலாம். இம்மொத்த வாக்குகளை 29 என்ற எண்ணால் பிரிப்பர். இவ்வாறு பெறும் தொகை தகைமைபெறும் தொகை (ஒரு தேசியப் பட்டியலுக்கான ஆசனத்தை பெறும் வாக்கு) எனலாம். இத்தகைமைபெறும் தொகையினைக் கொண்டு ஒவ்வொரு கட்சியும் தேசிய ரீதியாக பெற்ற வாக்குகளை தனித்தனியாகப் பிரிப்பர். அப்போது ஒவ்வொரு கட்சிக்குமான தேசியப் பட்டியல் ஆசனங்கள் பெறப்படும்.
இந்த அடிப்படையில் நாளை 14 ஆம் திகதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும்.
வி.ரி. சகாதேவராஜா
காரைதீவு குறூப் நிருபர்
The post இலங்கையில் பொதுத்தேர்தல் எவ்வாறு நடைபெறுகின்றது? appeared first on Thinakaran.

