எப்போதும் இலங்கையில் இருந்துதான் அகதிகள் படகுகள் பல நாடுகளில் கரையொதுங்குவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இலங்கையிலும் ஒரு அகதிகள் படகு கரையொதுங்கியிருக்கிறது.
அகதிகளை ஏற்றுக் கொள்வதில் இலங்கை அவ்வளவு வளர்ச்சிபெற்றுவிட்டதா என்றால் அப்படியும் இல்லை! வேறு எங்கோ அடைக்கலம் தேடித் சென்ற மியன்மார் நாட்டு பிரஜைகள்தான், படகின் கோளாறு காரணமாக முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளனர்.
அந்தப் படகில் 102 மியன்மார் ரோஹிங்கியா மக்கள் உள்ளதாகவும், இதில் குழந்தைகள், கர்ப்பினித் தாய்மார்கள், முதியவர்கள் என பலரும் பசியால் மிகவும் வாடியிருந்ததாகவும் இலங்கையில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மலேசியா உள்பட உலகெங்கும் பல நாடுகள் தமது உறவுகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நன்றியுடன், இலங்கைத் தமிழர்களும் தமது மண்ணில் அடைக்கலம் தேடிவந்த மக்களுக்கு பெரும் திரளாக குவிந்து உதவி செய்தனராம். இதனிடையே அந்நாட்டு கடல்படை, இராணுவம், போலீசார் எல்லோரும் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனராம்.


