Last Updated:
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு மத்தியில் இந்தியா ஒரு மிகச்சிறந்த பாதுகாப்பு கூட்டாளியாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, இந்தோனேசியா நாட்டுடன் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை மற்றும் ‘அஸ்த்ரா’ வான்வெளி ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இருந்த இந்தியா, இன்று ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டங்கள் மூலம் உலகின் முன்னணி ராணுவத் தளவாட ஏற்றுமதியாளராக உருவெடுத்து வருகிறது. பிலிப்பைன்ஸ், ஆர்மீனியா, வியட்நாம் வரிசையில் தற்போது இந்தோனேசியாவும் இந்திய ஏவுகணைகளைத் தனது ராணுவத்தில் இணைக்கிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பின்வரும் மூன்று முக்கிய ஏவுகணைகள் உலக நாடுகளை அதிகம் ஈர்த்து வருகின்றன அவை பற்றி பார்க்கலாம்..
பிரம்மோஸ்: இந்தியாவின் பிரம்மாண்ட ஏற்றுமதி வெற்றி
இந்தியாவின் DRDO மற்றும் ரஷ்யாவின் கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ், நிலம், கடல், வான் என அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஏவக்கூடியது. பிலிப்பைன்ஸ் நாடு 375 மில்லியன் டாலர் மதிப்பிலும், வியட்நாம் 620 மில்லியன் டாலர் மதிப்பிலும் இந்த ஏவுகணையை வாங்கியுள்ளன. தற்போது இந்தோனேசியாவும் தனது கடல்சார் பாதுகாப்பிற்காக இந்த ஏவுகணையைப் பெறவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) இதை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
2. ஆகாஷ்: ஆர்மீனியாவின் வான் பாதுகாப்பு அரண்
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை அமைப்பை முதன்முதலில் 230 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் ஆர்மீனியா வாங்கியது. இதன் விநியோகம் 2024 இறுதியில் தொடங்கி 2025-க்குள்ளாக முழுமையடைந்துள்ளது. எகிப்து போன்ற பிற நாடுகளும் இந்த ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
3. அஸ்த்ரா: முதன்முறையாக சர்வதேச சந்தையில் பாய்ச்சல்
இந்திய விமானப்படையில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த அஸ்த்ரா ஏவுகணை, முதன்முறையாக இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தோனேசிய ராணுவத்தின் ரஷ்ய தயாரிப்பு ‘சுகோய்’ (Sukhoi) போர் விமானங்களில் இந்த ஏவுகணைகள் இணைக்கப்படவுள்ளன.
இந்த ஏவுகணை ஏற்றுமதிகள் வெறும் வர்த்தகம் மட்டுமின்றி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு மத்தியில் இந்தியா ஒரு மிகச்சிறந்த பாதுகாப்பு கூட்டாளியாக உருவெடுத்துள்ளதைக் காட்டுகிறது.
இறக்குமதியிலிருந்து எக்ஸ்போர்ட்.. உலக பாதுகாப்பு சந்தையை அதிரவைக்கும் இந்தியாவின் 3 முக்கிய ஏவுகணைகள்


